Published : 04 Nov 2015 09:17 PM
Last Updated : 04 Nov 2015 09:17 PM
மூடீஸ் அனலிடிக்ஸ் என்ற பெயரில் வெளியான சமீபத்திய மோடி அரசின் மீதான அறிக்கை ஜூனியர் ஆய்வாளர் ஒருவரின் சொந்தக் கருத்தே என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதாவது, நாட்டின் பெருகி வரும் சகிப்பின்மை விவகாரத்தில் பிரதமர் மோடி தனது அமைச்சரவை சகாக்களை எச்சரிக்க வேண்டும் இல்லையெனில் உலக அளவில் நம்பகத்தன்மையை இழந்து விடும் என்று எச்சரித்திருந்தது. இது மூடீஸ் அனலிடிக்ஸ் என்பதை மேற்கோள் காட்டி இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. ஆனால் இது மூடீஸ் இன்வெஸ்டார் சர்வீசஸின் தர நிர்ணயம் அல்ல. இது ஜூனியர் ஆய்வாளர் ஒருவரின் சொந்தக் கருத்தே என்றும் இதனைக் கூட வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாமல் ஊடகங்கள் தாங்கள் விரும்பிய நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொண்டன என்று கூறியுள்ளது மத்திய அரசு.
இது குறித்து அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் “மூடீஸ் அனலிடிக்ஸில் பணியாற்றும் ஜூனியர் அசோசியேட் பொருளாதார ஆய்வாளர் ஒருவரின் சொந்தக் கருத்தை இந்திய ஊடகங்களின் சில பகுதியினர் திரித்து பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிட்டது வருந்தத் தக்கது.
ஊடகத்தினர் மூடீஸ் அனலிடிக்ஸ் என்பது ஒரு தரவு மற்றும் ஆய்வு நிறுவனம் மட்டுமே என்பதையும் மூடீஸ் இன்வெஸ்டார் சர்வீசஸ் என்ற நிறுவனமே தரநிலைகளை வழங்கும் நிறுவனம் என்பதையும் வேறுபடுத்திப் பார்க்காதது ஆச்சரியமளிக்கிறது.
மேலும், எந்த வித உரிய சிரத்தையுமில்லாமல், மூடீஸ் அனலிடிக்ஸ் என்பதற்கும் மூடீஸ் இன்வெஸ்டார் சர்வீசஸ் என்பதற்குமான வித்தியாசத்தை வாசகர்களுக்கு தெரிவிக்கவில்லை.
மூடீஸ் அனலிடிக்ஸ் நிறுவனத்தின் ஜூனியர் ஆய்வாளர் ஒருவரின் கருத்து மூடீஸ் கருத்தாக ஊடகம் நெடுக அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் ஆய்வாளர் ஒருவரின் சொந்தக் கருத்து தர நிர்ணய நிறுவனத்தின் இந்தியாவை பற்றிய வருணனையாக, தாங்கள் விரும்பும் கதையாடலை சித்தரிக்க பயன்படுத்தப் பட்டதை அரசு துயரத்துடன் அவதானித்துள்ளது”
என்று மத்திய அரசு மூடீஸ் அறிக்கையாக வெளியிடப்பட்டதை நிராகரித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT