Published : 06 Feb 2021 07:23 AM
Last Updated : 06 Feb 2021 07:23 AM

ஜவுளித்துறையில் 4.5 கோடி பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு; ஸ்மிருதி இரானி

புதுடெல்லி

ஜவுளித்துறையில் 4.5 கோடி பேர் நேரடி வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக மத்திய ஜவளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

‌* அதிகளவிலான வேலை வாய்ப்புகளை அளிக்கும் துறைகளில் ஒன்று ஜவுளித்துறை.

இதில் 4.5 கோடி பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் கிராம மக்கள். ஜவுளித்துறையை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜவுளித்துறை உலகளவில் போட்டியிடும் விதத்திலும், பெரிய முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், 5 டிரில்லியன் பொருளாதாரத்தை உருவாக்கவும் 7 மிகப் பெரிய முதலீட்டில் ஜவுளி பூங்காக்கள் (மித்ரா) திட்டம் மற்றும் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.

* வடகிழக்கு மாநிலங்களில் கைத்தறி நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர். இதில் பெண்களின் பங்களிப்பு 88 சதவீதம். வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும், கீழ்கண்ட திட்டங்களை ஜவுளித்துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது.

* தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டம்

* விரிவான கைத்தறி தொகுப்பு மேம்பாட்டு திட்டம்

* கைத்தறி நெசவாளர்களின் விரிவான நலத்திட்டம்

* நூல் விநியோக திட்டம்

* வடகிழக்கு பகுதி ஜவுளி மேம்பாட்டு திட்டம்

* மேற்கண்ட திட்டங்கள் மூலம் கச்சா பொருட்கள் வாங்கவும், கைத்தறி மற்றும் இதர பொருட்கள் வாங்கவும், கட்டமைப்பு மேம்பாட்டுக்கும், திறன் மேம்பாட்டுக்கும், புதிய வடிவமைப்பு கண்டுபிடிப்புகளுக்கும் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.

*தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தை ஜவுளித்துறை அமைச்சகம் 2015-16ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. நவீன கைத்தறி உபகரணங்கள் வழங்க, இத்திட்டம் சில மாற்றங்களுடன் “ஹத்கர்கா சம்வர்தன் சகாயத்தா திட்டம்’’ என கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெயர் மாற்றப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் கைத்தறிகள் மற்றும் துணைப் பொருட்கள் செலவில் 90 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகம் அதிக அளவாக, ரூ. 10 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரம் பெற்றுள்ளது.

* வழிகாட்டு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 65 கைவினை தொழில் தொகுப்புகளின் மீது கவனம் செலுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்தொழிலில் ஈடுபடும் சுய உதவிக்குழுவினர் / கலைஞர்கள் 3 ஆண்டு காலத்துக்குள், தன்னிறைவு அடைவதை உறுதி செய்யும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் 16 கைவினை தொழில் தொகுப்புகள் பெண் கலைஞர்களை உள்ளடக்கியது. 11 தொகுப்புகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பொதுப்பிரிவு கலைஞர்களை உள்ளடக்கியது. 9 தொகுப்புகள் பட்டியலின கலைஞர்களை உள்ளடக்கியது. 9 தொகுப்புகள் பழங்குடியினருக்கானது. 4 தொகுப்புகள் புவியியல் குறியீடுகளுடன் கூடிய கைவினை தொழில் தொகுப்பு.

இந்த கைவினை தொழில் தொகுப்புகளுக்கு தேவையான நிதியுதவியை அரசு அளிக்கிறது.

* ஜவுளித்துறை மேம்பாட்டுக்கு பல திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் தொழில்நுட்ப மேம்பாடு, கட்டமைப்பு உருவாக்கம், திறன் மேம்பாடு ஆகியவற்றை வளர்க்கிறது.

* திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித்திட்டம், விசைத்தறி மேம்பாட்டு திட்டம், தொழில்நுட்ப ஜவுளி திட்டம், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டம், பட்டு சமக்ரா, ஒருங்கிணைந்த கம்பளி மேம்பாட்டு திட்டம் என பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில் துறைவாரியாக திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x