Published : 17 Nov 2015 09:15 AM
Last Updated : 17 Nov 2015 09:15 AM
கர்நாடக மாநிலம் பெங்களூரு, கோலார், ராம்நகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 28-ம் தேதியில் இருந்து தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி தாழ்வான பகுதிகளிலும் பள்ளங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது. பெங்களூரு வில் தொடர்ந்து மழை பெய்வதால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
விடிய விடிய கொட்டும் மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் கரை புரண்டோடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களுக்கு மாநகர பேருந்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆட்டோ, கார் உள்ளிட்ட தனியார் வாடகை வாகனங்கள் பயணி களிடம் வழக்கமான கட்டணத்தை விட 25 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதேபோல மழை காரணமாக பெங்களூரு சந்தைக்கு வரும் தக்காளி, வெங்காயம், கேரட், பீன்ஸ்,உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
அண்டை மாநிலமான தமிழகத்திலும் கனமழை நீடிப்பதால் காய்கறிகளின் வரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.80 (முந்தைய விலை ரூ.20 ), வெங்காயம் ரூ.50 (முந்தைய விலை ரூ.25 ), கேரட் ரூ.65 (முந்தைய விலை ரூ.30 ) என அனைத்து காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
வருகிற 19-ம் தேதி வரை பெங்களூருவில் மழை தொடரும் என பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT