Last Updated : 27 Dec, 2020 12:02 PM

 

Published : 27 Dec 2020 12:02 PM
Last Updated : 27 Dec 2020 12:02 PM

கவுகாத்தி வந்த அமித் ஷாவுடன் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சந்திப்பு: ஓரிரு நாட்களில் பாஜகவில் இணையப் போவதாக பேட்டி

அசாம் முன்னாள் அமைச்சரும், கோலகாட் எம்எல்ஏவுமான அஜந்தா நியோக், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்தார்.

அசாமில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸின் முன்னாள் அமைச்சரும், கோலகாட் தொகுதி எம்எல்ஏவுமான அஜந்தா நியோக்கை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காங்கிரஸ் நீக்கியுள்ளது.

முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் கன்வீனர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோரை அஜந்தா சந்தித்தார். தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் அஜந்தா ஈடுபட்டு வருவதாகக் கூறி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் வெள்ளிக்கிழமை அவரை நீக்கியது.

அதனைத் தொடர்ந்து 2 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை அசாம் வந்த பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சனிக்கிழமை அஜந்தா நியோக் சந்தித்துப் பேசினார்.

காங்கிரஸை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், அஜந்தா நியோக் அடுத்த ஓரிரு நாட்களில் பாஜகவில் சேரப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசாம் முன்னாள் அமைச்சர் அஜந்தா நியோக் ஊடகங்களிடம் கூறுகையில், "நான் காங்கிரஸில் இருந்தபோது கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தேன். எனவே என்னால் எனது கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்த முடியவில்லை. இப்போது நான் அந்தக் கட்சியை விட்டு வெளியேறிவிட்டேன். அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஓரிரு நாட்களுக்குள் பாஜகவில் சேரப்போகிறேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x