Last Updated : 27 Dec, 2020 11:10 AM

 

Published : 27 Dec 2020 11:10 AM
Last Updated : 27 Dec 2020 11:10 AM

மாநிலங்கள்-மத்திய அரசு உறவு சீர்கேடு; சோவியத் யூனியன் போல் மாநிலங்கள் சிதற நீண்டகாலம் ஆகாது: சிவசேனா விமர்சனம்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே: கோப்புப்படம்

மும்பை

மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாகி, கவலையளிக்கும் விதத்தில் இருந்து வருகிறது. இப்படியே சென்றால், சோவியத் யூனியன் போல் மாநிலங்கள் சிதறுண்டுபோக நீண்டகாலம் ஆகாது என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான 'சாம்னா'வில் இன்று தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது:

''அரசியல் ஆதாயத்துக்காக மக்களைத் துன்புறுத்துகிறோம் என்று மத்திய அரசு உணராவிட்டால், சோவியத் யூனியன் போல், மாநிலங்கள் சிதறுண்டு போவதற்கு நீண்டகாலம் ஆகாது. 2020-ம் ஆண்டு என்பது மத்திய அரசின் செயல்திறன், நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பி இருக்கிறது.

பல்வேறு விவகாரங்களிலும் உச்ச நீதிமன்றம் தனது கடமையை மறந்துவிட்டது.

பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா சமீபத்தில் பரபரப்பான பேட்டி அளித்தார். அதில், மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தினார் என விஜய் வர்க்கியா தெரிவித்தார்.

என்ன, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைக் கவிழ்க்க சிறப்பு கவனத்தை பிரதமர் எடுத்துக் கொண்டாரா? நாட்டுக்கு உரித்தானவர் பிரதமர். கூட்டாட்சி அடிப்படையில் இந்த தேசம் இருக்கிறது. மாநிலத்தில் பாஜக ஆட்சி இல்லாத அரசுகள் கூட நாட்டின் நலன்பற்றிதான் சிந்திக்கின்றன. ஆனால், இந்தச் செயலால் இந்த உணர்வு கொல்லப்பட்டு வருகிறது.

முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை மேற்கு வங்கத்தின் ஆட்சி அதிகாரத்திலிருந்து இறக்க மத்திய அரசு முயன்று வருகிறது. ஜனநயகத்தில் அரசியல் தோல்வி என்பது சாதாரணமானது. ஆனால், மத்திய அரசு அந்த தோல்வியைத் தாங்காமல் மம்தா அரசை வெளியேற்ற முயல்வது வேதனையானது.

மிகப்பெரிய பேரணிகள், ஊர்வலங்கள் உள்துறை அமைச்சர் தலைமையில் இந்நாட்டில் நடக்கின்றன. அதேநேரத்தில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க இரவுநேர ஊரடங்கும் அவசியம். ஆட்சியாளர்கள் விதிகளை மீறினால், மக்கள்தான் விலை கொடுக்கிறார்கள்.

நடிகை கங்கணா ரணாவத்தையும், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியையும் பாதுகாக்க மத்திய அரசு முயல்கிறது. இந்திய எல்லையில் சீன ராணுவம் ஆக்கிரமித்த போதிலும் அதைப் புறமுதுகிட்டு அனுப்ப அந்த தேசம் முயவில்லை. இந்த விவகாரத்தை திசை திருப்ப தேசியவாதம் முன்வைக்கப்பட்டு, சீனப் பொருட்களை வாங்க வேண்டாம் எனக் கூறி சீன முதலீடு ஊக்குவிக்கப்பட்டது.

உலகமே கரோனாவில் பாதிப்படைந்தது. அமெரிக்க அரசு, பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கிய தனது மக்ககளுக்குச் சிறந்த நிதியுதவியை வழங்கியது. இதனால் மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் பணம் அமெரிக்க மக்களின் வங்கிக்கணக்கில் செல்லும். இதேபோன்று பிரேசில் நாட்டிலும், ஐரோப்பிய நாடுகளிலும் நடந்தன. ஆனால், இந்திய மக்கள் அனைவரும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டாகியும் வெறும் கையுடன்தான் இருக்கிறார்கள்.

புதிதாகக் கட்டப்படும் நாடாளுமன்றக் கட்டிடம் எந்தச் சூழலையும் மாற்றிவிடாது. ரூ.1000 கோடி செலவு செய்து கட்டப்படும் புதிய நாடாளுன்றத்துக்கான பணத்தை மக்களின் சுகாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும். மக்கள் இதை பிரதமர் மோடியிடம் வலியறுத்த வேண்டும்''.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x