Last Updated : 17 Dec, 2020 03:16 AM

 

Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்ற கோரி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கடிதம்: வேறு கட்சிக்கு தாவி விடுவார்கள் என சோனியா தயக்கம்

கடந்த ஆண்டு பிப்ரவரியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதியதலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். இப்பதவியில் இருந்த திருநாவுக்கரசு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பியதும் அதன் காரணமாக இருந்தது.

பதவியில் அமர்ந்த அழகிரிவழக்கமாக புதிய தலைவர்கள் செய்வதுபோல தனது நிர்வாகக்குழுவை மாற்றி அமைக்கவில்லை. இதன் பிறகு கரோனா பரவலைகாரணம் காட்டி கட்சி செயல்பாடுகளில் அழகிரி ஈடுபடவில்லை என தமிழக காங்கிரஸார் மத்தியில் புகார் எழுந்தது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த சிலமாதங்களில் வரவிருக்கும் சூழலில்நிர்வாகிகளை மாற்ற அழகிரி விரும்புகிறார். இதற்கான கோரிக்கையுடன் அவர் புதிதாக நியமிக்க விரும்புகிறவர்களின் பட்டியலையும் தயாரித்ததாகத் தெரிகிறது. இதை தீபாவளிக்கு முன்பு, காங்கிரஸின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான குண்டு ராவை நேரில் சந்தித்து சமர்ப்பித்துள்ளார்.

குண்டுராவ் மூலமாக கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கடிதம் மீது தமிழக மூத்த தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு, ப.சிதம்பரம் உள்ளிட்ட அனைவருமே தேர்தல் நேரத்தில்நிர்வாகிகளை மாற்றுவது சரியில்லை எனவும், அவ்வாறு மாற்றினால் அதிருப்தியடைபவர்கள், புதிய கட்சி தொடங்கி ஆட்களை தேடும் ரஜினி, கமலுடன் போய் இணையும் வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர். இதை ஏற்றசோனியா, அழகிரியின் கோரிக்கையை கிடப்பில் போட முடிவுசெய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸின் தேசியநிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, "எங்கள் கூட்டணியில் உள்ள திமுகஉள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் உள்ளிட்ட எதுவுமே நடைபெறவில்லை என புகார்கள் வருகின்றன.

எந்த தலைமையின் கீழும் இல்லாத வகையில், அழகிரி பதவி ஏற்றது முதல் பல தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டனர். தேர்தல் நேர மாற்றத்தால் ரஜினி, கமல் உள்ளிட்டோரின் கட்சிகளுக்கு பலனளித்து விடும் என்பதால், நிர்வாகிகளை மாற்ற சோனியா மிகவும் தயங்குகிறார்" என்றனர்.

கடந்த ஒன்றரை ஆண்டில், நடிகை குஷ்பு, அப்ஸரா ரெட்டி, கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ, முன்னாள் எம்எல்ஏ-க்களான முனிரத்னம், மணிவர்மா மற்றும் பன்னீர்செல்வம், ராமசாமி படையாச்சியின் மகனான எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ் என இந்தப் பட்டியல் நீள்கிறது. பிஹார் தேர்தல் முடிவுகளும் தமிழக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x