Last Updated : 08 Dec, 2020 02:58 PM

 

Published : 08 Dec 2020 02:58 PM
Last Updated : 08 Dec 2020 02:58 PM

மத்திய ரயில் பாதுகாப்பு படையின் பெண் காவலர்களாக எம்.டெக், எம்சிஏ உள்ளிட்ட முதுநிலைப் பட்டதாரிகள்

மத்திய ரயில் பாதுகாப்பு படையின்(ஆர்பிஎப்) பெண் காவலர் பணிக்கானப் பயிற்சியை 248 இன்று முடித்துள்ளனர். இவர்களில் எம்.டெக், எம்சிஏ மற்றும் எம்பிஏ உள்ளிட்ட முதுநிலைப் பட்டதாரிகளும் இடம் பெற்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் டிசம்பரில் துவங்கிய ஆர்பிஎப் பெண் காவலர் பயிற்சி, கரோனா பரவலால் 4 மாதங்கள் தடை ஏற்பட்டிருந்தது. இதனால், கடந்த ஆகஸ்டில் முடிய வேண்டியப் பயிற்சி இன்று நிறைவு பெற்றுள்ளது.

இதை 248 பேர் உபியின் பிரயாக்ராஜில் உள்ள ஆர்பிஎப் பிராந்தியப் பயிற்சி நிறுவனத்தில் இன்று முடித்து பணிக்கு திரும்புகின்றனர். இனி இவர்கள் ஆர்பிஎப் அங்கமாகப் பணியாற்றுவார்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகளாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் பலரும் பிஎஸ்பி, பிடெக், எம்டெக், எம்சிஏ மற்றும் எம்பிஏ ஆகிய இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்கள் பெற்றவர்களாக உள்ளனர்.

தம் கல்விக்கு ஏற்ற அரசு பணி கிடைக்காதமையால் வேறு வழியின்றி இந்த காவலர் பணிக்காக ஆர்பிஎப் படையில் இணைந்துள்ளனர். இவர்கள் சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியபிரதேசம், உபி, ஹரியாணா, மகராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

மத்திய ரயில்வேயில் 59, வடக்கு ரயில்வேயில் 97, வட மத்திய ரயில்வேயில் 19, வடகிழக்கு ரயில்வேயில் 2, மேற்கு ரயில்வேயில் 47, மேற்கு மத்திய ரயில்வேயில் 3 மற்றும் வடமேற்கு ரயில்வேயில் 22 பெண்களும் காவலர்கள் அமர்த்தப்பட உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x