Published : 08 Dec 2020 01:52 PM
Last Updated : 08 Dec 2020 01:52 PM

கோவிட்-19 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா முன்னிலை: ஹர்ஷ் வர்தன் பெருமிதம்

கோவிட்-19 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் கோவிட் நோய் தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட தயாரிப்பில் உள்ளன. அவற்றில் இரண்டு தயாரிப்பின் முக்கிய கட்டத்தில் உள்ளன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்டு. இவை இரண்டும் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனையில் உள்ளன. நமது முதன்மை நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தனது சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அனைத்து நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளுக்கும் இந்தியா சோதனை முயற்சிகளை அளித்து வருகிறது. உலகின் மிகப்பெரும் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்துக்கான சோதனையை மேற்கொண்டு வருகிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மரபணு சார்ந்த தடுப்பு மருந்தின் இரண்டாவது கட்ட சோதனையை ஜைடஸ் கேடில்லா மேற்கொண்டு வருகிறது. மிகப்பெரும் மருந்து நிறுவனங்களுள் ஒன்றான டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ், ரஷ்ய தடுப்பு மருந்தின் இறுதிகட்ட சோதனையை மேற்கொண்டு அதற்கான ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்தியாவில் அதனை விநியோகிக்கும்”, என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்திய தொழில்துறை கூட்டமைப்பான சிஐஐ ஆகியவை இணைந்து நடத்திய இந்திய போர்ச்சுகல் தொழில்நுட்ப மாநாடு 2020-ல் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், “கோவிட்-19-னால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக அரசின் ஆதரவுடன் நூற்றுக்கும் மேற்பட்ட புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்கியுள்ளன”, என்று தெரிவித்தார்.

உலகளவில் அதிக எண்ணிக்கையில் காப்புரிமைகளை பதிவு செய்துள்ள முதல் பத்து நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x