Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

எல்லையில் புதிய கட்டமைப்புகளை அகற்ற இந்தியா - சீனா பேச்சுவார்த்தையில் ஒப்புதல்

லடாக் எல்லையில் புதிய கட்டமைப்புகளை அகற்ற இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

கடந்த மே மாதம் முதல் லடாக் எல்லையில் போர்ப் பதற்றம் நீடிக்கிறது. சீன ராணுவ தரப்பில் எல்லையில் 60,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இணையாக இந்திய வீரர்களும் எல்லையில் எதற்கும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற இந்திய - சீன ராணுவ உயரதிகாரிகளின் கூட்டத்தில், எல்லையில் இருந்து 3 கட்டங்களாக படைகளை வாபஸ் பெற உடன்பாடு எட்டப்பட்டது. முதல்கட்டமாக ஒரே நாளில் இரு நாடுகளின் ராணுவங்களும், லடாக் எல்லையில் இருந்து டாங்கிகளை திரும்பப் பெற வேண்டும். இரண்டாம் கட்டமாக லடாக்கின் பான்காங் ஏரி வடக்கு கரையில் நாள்தோறும் 30 சதவீதம் என்ற வகையில் 3 நாட்கள் படை வீரர்களை வாபஸ் பெற வேண்டும். மூன்றாம் கட்டமாக பான்காங் ஏரியின் தெற்கு கரையில் முகாமிட்டுள்ள இரு நாடுகளின் வீரர்களும் அவரவர் பழைய நிலைக்கு செல்ல வேண்டும் என்று உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல், மே மாதத்துக்குப் பிறகு லடாக் எல்லையில் அமைக்கப்பட்ட புதிய கட்டமைப்புகளை அகற்றவும் இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன. இதுகுறித்து இந்திய திபெத் எல்லை காவல் படை தலைவர் எஸ்.எஸ்.தேஸ்வால் கூறியதாவது:

எங்கள் படை வீரர்கள் 11,000 அடி உயர மலை முகடுகளில் நாட்டின் எல்லையை காவல் காத்து வருகின்றனர். உயரமான மலைப் பகுதியில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும். குளிர்காலத்தில் மைனஸ் 40 டிகிரி அளவுக்கு உறைய வைக்கும் குளிர் நிலவும். அனைத்து சிரமங்களையும் தாங்கிக் கொண்டு நாட்டுக்காக எங்கள் படை வீரர்கள் எல்லையை காவல் காத்து வருகின்றனர். வீரர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளன. சத்துள்ள உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்சினைகள் எழுந்தது உண்மைதான். எனினும் எல்லைப் பிரச்சினைக்கு வெகு விரைவில் அமைதி வழியில் தீர்வு காணப்படும். இவ்வாறு எஸ்.எஸ்.தேஸ்வால்தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x