Last Updated : 05 Sep, 2015 09:32 AM

 

Published : 05 Sep 2015 09:32 AM
Last Updated : 05 Sep 2015 09:32 AM

3 ஆண்டுகளுக்கு முன்பு ஷீனா போரா கொலை: பீட்டரிடம் 3-வது நாளாக விசாரணை - சித்தார்த் தாஸ், வித்தியும் வாக்குமூலம் அளித்தனர்

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணியின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியிடம், 3-வது நாளாக நேற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். அத்துடன் சித்தார்த் தாஸ், வித்தி ஆகியோரின் வாக்குமூலங்களையும் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி. இவர் ஏற் கெனவே 2 முறை திருமணமானவர். இந்நிலையில் முதல் கணவர் சித்தார்த் தாஸுக்கு பிறந்த மகள் ஷீனா போரா கடந்த 3 ஆண்டு களுக்கு முன் கொலை செய்யப்பட் டார். இதில் இந்திராணி, இவ ருடைய 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள் ளனர். அவர்களை இன்று வரை போலீஸார் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பீட்டர் முகர்ஜியிடம் மும்பை போலீஸார் 2 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர். 3-வது நாளாக தொடர்ந்து நேற்றும் அவரிடம் விசாரணை நடந்தது. அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு போலீஸார் பதில் பெற்றுள்ளனர். நேற்றுமுன்தினம் இந்திராணி, பீட்டர் இருவரையும் தனித்தனி அறைகளில் வைத்தும் நேருக்கு நேர் சந்திக்க வைத்தும் போலீஸார் விசாரணை நடத்தினர். நேற்று பீட்டரிடம் விசாரணை நடந்தது.

முதல் கணவரிடம் விசாரணை

காலை 11.20 மணிக்கு கர் காவல் நிலையத்துக்கு சென்றார் பீட்டர். அரை மணி நேரம் கழித்து 2-வது கணவர் சஞ்சீவின் மகள் வித்தி வந்தார். அதன்பிறகு 12.30 மணிக்கு இந்திராணியின் முதல் கணவரும் ஷீனா போராவின் தந்தையுமான சித்தார்த் தாஸ் வந்தார்.

மூன்று பேரிடமும் போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தினர். மேலும் சித்தார்த் தாஸின் மரபணு மாதிரிகளை போலீஸார் எடுத்துக் கொண்டனர். அதன்மூலம் ராய்காட் பகுதியில் கிடைத்த மண்டை ஓடு, எலும்புகள் கொலை செய்யப்பட்ட ஷீனா போராவுடையதா என்று கண்டுபிடிக்கப்பட உள்ளது.

பீட்டரிடம் இருந்து யார் யார் எவ்வளவு பணம் வாங்கி இருக்கிறார்கள், எந்தெந்த நிறுவனங்களில் பங்குகள் உள்ளன, வங்கியில் பணப் பரிவர்த்தனை விவரங்கள் போன்றவை குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, தனது சார்ட்டட் அக்கவுண்டன்ட்டையும் பீட்டர் உடன் அழைத்து வந்திருந்தார். நள்ளிரவு வரை பீட்டரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘ஷீனா போரா கொலை தொடர்பாக இதுவரை நடந்த விசாரணை குறித்து, மும்பை போலீஸ் ஆணையர் ராகேஷ் மரியா, விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து விவரங்கள் அளிப்பார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x