Last Updated : 05 Sep, 2015 09:22 AM

 

Published : 05 Sep 2015 09:22 AM
Last Updated : 05 Sep 2015 09:22 AM

முகர்ஜி சார் என்று அழையுங்கள்: மாணவர்களிடம் கூறிய பிரணாப்

ஆசிரியர் தினத்தையொட்டி நேற்று பள்ளி மாணவர்களுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துரையாடினார். அப்போது, “முகர்ஜி சார் என்று என்னை கூப்பிட்டால் மகிழ்ச்சி அடைவேன்” என்றார்.

குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளியில் சுமார் அரை மணி நேரம் மாணவர்களிடையே பிரணாப் பேசினார். அப்போது அவர் தனது பள்ளிப் பருவத்து அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். மாணவர்கள் அதை மிகவும் உன்னிப்பாக கேட்டனர். பிறகு தனது உரை அலுப்பூட்டுகிறதா என மாணவர்களிடம் பிரணாப் கேட்டார். இதற்கு ‘இல்லை’ என்று மாணவர்கள் கூறினர்.

பிறகு மாணவர்களிடம் பிரணாப் கூறும்போது, “குடியரசுத் தலைவராக நான் உங்களிடம் உரையாடவில்லை. ஒரு ஆசிரியராக உங்களிடம் பேசினேன். எனவே நீங்கள் ‘முகர்ஜி சார்’ என்றே என்னை அழைக்கலாம். இதனால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்றார்.

ஆசிரியர் தின வாழ்த்து

இதனிடையே குடியரசுத் தலைவர் பிரணாப் நேற்று வெளியிட்ட ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். ஆசிரியர்கள் தங்களின் போற்றுதலுக்குரிய பணியில் வெற்றிபெற வாழ்த்துகிறேன். மிகவும் மேன்மையான பணிகளில் ஒன்றான கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, மாணவர்களுக்கு நுண்ணறிவை புகட்டுகின்ற நமது ஆசிரியர்களை கௌரவிக்கும் நாளாக ஆசிரியர் தினம் உள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தை ஆசிரியர்கள் வடிவமைக்கின்ற னர். மாணவர்களுக்கு நுண்ணறி வும் எதிர்கால சந்ததியினருக்கு கல்வி அறிவும் அளிக்கின்றனர்.

கற்பிக்கும் பணி, சமூகத்தின் அங்கீகாரத்தையும் மரியாதையும் பெறவேண்டியது அவசியம்.

இவ்வாறு பிரணாப் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x