Published : 29 Aug 2020 07:56 AM
Last Updated : 29 Aug 2020 07:56 AM

ஒரு நாளில் கரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் அமெரிக்காவை சற்றே கடந்த இந்தியா -பலி எண்ணிக்கையில் உலகில் 3ம் இடம்

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக புதிதாகக் கரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 75,000த்துக்கும் அதிகமான நிலையில் ஒரு நாளில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவை விடவும் சற்றே அதிகமாகியுள்ளது.

உதாரணத்துக்கு கடைசி 2 நாட்களில் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 75,000 த்தைக் கடந்தது. வெள்ளிக்கிழமையன்று 77,266 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டது, இது அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மார்ச் 21ம் தேதி 77,255 பேருக்கு ஒரேநாளில் தொற்று ஏற்பட்டதை தற்போது இந்தியா 77,266 தொற்று என்று ஒருநாள் தொற்று எண்ணிக்கையில் கடந்துள்ளது.

பிரேசிலில் ஜூலை 29ம் தேதியன்று ஒரே நாளில் 69,074 பேருக்கு அதிகபட்சமாக கரோனா தொற்று பாதித்தது. அதே போல் பலி எண்ணிக்கையில் வெள்ளிக்கிழமையன்று 1009 பேர் மேலும் கரோனாவுக்குப் பலியாக இந்தியாவின் பலி எண்ணிக்கை 62,724 என்று மெக்சிகோ பலி எண்ணிக்கையைக் கடந்து உலகில் 3வது அதிகம் கரோனா மரணம் நிகழ்ந்த நாடாக உள்ளது.

தொடர்ச்சியாக 2வது நாளாக இந்தியா 9 லட்சத்துக்கும் அதிகமான சாம்பிள்களை சோதித்துள்ளது. அதாவது 3T என்று அழைக்கப்படும் டெஸ்ட், ட்ராக், ட்ரீட் என்ற கொள்கையில் கூர்மையான கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே நாளொன்றுக்கு 10 லட்சம் சாம்பிள்களை சோதிக்கும் திறனை உருவாக்கிக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 24 மணிநேரத்தில் 9 லட்சத்து ஆயிரத்து 338 சாம்பிள்களை சோதித்துள்ளது.
மொத்தமாக சாம்பிள்கள் பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியை நெருங்கி வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மொத்தம் 1564 பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 998 அரசு சோதனை நிலையங்களாகவும் 566 தனியாராகவும் உள்ளது.

வெள்ளிக்கிழமையன்று சுகாதார அமைச்சகம் தெரிவிக்கையில் 3 அடுக்கு கோவிட் மருத்துவ வசதிகளை ஐசியு மற்றும் வெண்ட்டிலேட்டர் வசதிகளுடன் உருவாக்கியுள்ளதாகக் கூறியது. கோவிட் 19-க்கென்று பிரத்யேகமான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள், அழைப்பின் பேரில் உடனே வந்து கவனிக்கும் மருத்துவர் என்று உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது 1723 கோவிட் சிகிச்சை மருத்துவமனைகளும் 3,883 கோவிட் ஹெல்த் செண்டர்களும் 11,689 கோவிட் கேர் செண்டர்களும் உள்ளன என்று கூறும் சுகாதார அமைச்சகம் மொத்தம் 15, 89,105 தனிமைப் படுக்கைகளையும் 2,17,128 ஆக்சிஜன் வசதி படுக்கைகளும் 57,830 ஐசியுக்களும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 5 மாதங்களில் நான்கில் 3 பங்கு கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர், 4-ல் ஒரு பங்குக்கும் குறைவாகவே தற்போது கோவிட் சிகிச்சையில் உள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-பிடிஐ தகவல்களுடன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x