Published : 28 Aug 2020 08:24 PM
Last Updated : 28 Aug 2020 08:24 PM

‘‘தமிழகத்தின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்’’ - வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் இளைய சகோதரரான வசந்தகுமார் தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர். தொழிலதிபராக விளங்கும் வசந்தகுமார், கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.

2016-ம் ஆண்டு நாங்குநேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட வசந்தகுமார், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.ஆனார்.

கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்தார். சமீபகாலமாக அவர் சென்னையில் தங்கியிருந்தார்.

கரோனா பரிசோதனை செய்தபோது வசந்தகுமாருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு 10-ம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வசந்தகுமார் எம்.பி.யின் உடல்நிலை ஆரம்பத்தில் சீராக இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முதல் வசந்தகுமாரின் உடல்நிலை மோசமடைந்தது. ஆக்சிஜன் அளவு வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

வசந்தகுமார் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவரது மகன் இத்தகவலைத் தெரிவித்ததாகவும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் ட்விட்டரில் இன்று பிற்பகலில் தெரிவித்தார். இந்நிலையில் இன்று மாலை சுமார் 7 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது.

வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான அகத்தீஸ்வரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடக்கும் எனத் தெரிகிறது.வசந்தகுமார் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் திடீர் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் மற்றும் சமூக சேவையில் அவரின் தீவிர ஆர்வம் குறிப்பிடத்தக்கது.

அவருடன் நான் கலந்துரையாடிய தருணங்களில் தமிழகத்தின் முன்னேற்றத்தில் அவர் ஆர்வம் கொண்டவராக இருந்ததை பார்த்தேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x