Published : 16 Jun 2020 05:49 PM
Last Updated : 16 Jun 2020 05:49 PM
கரோனா நோயாளிகளில் மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே ரயில் பெட்டிகளில் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியிலும் கரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே 3-வது அதிகமாக கரோனா நோயாளிகள் இருப்பது டெல்லியில் தான்.
கரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என புகார்எழுந்துள்ளது. குறிப்பாக, டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எராளமான படுக்கைகள் காலியாக உள்ளபோதும், கரோனா நோயாளிகளை அலைக்கழிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
மேலும் டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் கரோனா நோயால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கேட்பாரற்று கிடப்பதாகவும் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து டெல்லியில் கரோனா பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரயில் பெட்டிகள் மருத்துவ மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து வடக்கு ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‘‘இன்று ஒரே நாளில் 300 ரயில் பெட்டிகளை டெல்லியில் கரோனா சிகிச்சைக்காக ஒப்படைத்துள்ளோம். இதில் உள்ள படுக்கைகளில் கரோனா நோயாளிகள் 8 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். தீவிர பாதிப்பு அல்லாத மிதமான பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே இந்த ரயில் பெட்டிகளில் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் பராமரிப்பை டெல்லி மாநில அரசு நிர்வாகம் மேற்கொள்ளவுள்ளது.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT