Published : 14 Jun 2020 04:17 PM
Last Updated : 14 Jun 2020 04:17 PM
பிரதமர் மோடி தனது வளர்ச்சி திட்டங்களால் ஜம்மு காஷ்மீரின் முகத்தையே மாற்றுவார் அப்போது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மக்களும் இந்தியாவின் ஒரு அங்கமாக மாற விரும்புவார்கள், கோரிக்கை வைப்பார்கள் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஜன்சம்வாத் மெய்நிகர் கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ஆக்ரமிப்பிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்று அப்பகுதி காஷ்மீர் மக்கள் விரும்பி இந்தியாவின் அங்கமாக மாற விரும்பும்போது பாகிஸ்தான் ஆக்ரமிப்புப் பகுதி காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற இந்திய நாடாளுமன்ற தீர்மானம் பூர்த்தியடையும், என்றார் ராஜ்நாத் சிங்.
“ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியே பிரதானம் என்ற செய்தியை நம் அரசு தெளிவாக தெரிவித்து விட்டது. இதில் வெற்றியும் அடைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நம் முயற்சி அதன் முகத்தை மாற்றுவது, அதாவது இந்த மாற்றத்தைப் பார்த்து பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மக்கள் பொறாமையடைய வேண்டும். நாமும் இந்தியாவின் பகுதியாக இருந்தால் நம் தலைவிதியும் மாறியிருக்குமே என்று அவர்கள் விரும்பத் தொடங்குவார்கள்.
எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதற்காகக் காத்திருப்போம். பாகிஸ்தான் ஆக்ரமிப்பிலிருந்து தாங்கள் விடுதலை பெற அவர்கள் கோரிக்கை வைப்பார்கள். இது நடக்கும் போது நாடாளுமன்ற தீர்மானம் நிறைவடையும்.
நாட்டின் கறையாக இருந்த ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370ம் பிரிவு மோடியின் தைரியத்தினால் நீக்கப்பட்டது. முன்பெல்லாம் போராட்டங்களின் போது ஐஎஸ் தீவிரவாத கொடிகள் அங்கு பறக்கும் இப்போது காஷ்மீரில் மூவர்ணக்கொடி பறக்கிறது.
முன்பு அரசியல் சாசன சிறப்பு அந்தஸ்துப் பிரிவான 370-ஐ உலக நாடுகள் ஆதரித்தன. ஆனால் இப்போது இந்தியாவின் முடிவை முஸ்லிம் நாடுகளே ஆதரிக்கின்றன. இதன் மூலம் உலக தரநிலையில் இந்தியாவின் மதிப்பு கூடியுள்ளது. மலேசியா, துருக்கி போன்ற நாடுகள்தான் 370 நீக்க முடிவை ஆதரிக்கவில்லை.
2014-19 வரை காஷ்மீரில் வளர்ச்சிக்காக இந்திய அரசு ரூ.2 லட்சம் கோடி செலவிட்டுள்ளது, முன்பெல்லாம் வளர்ச்சிக்கான நிதி ஊழலில் மறைந்து போனது,பிரிவினை வாதிகளிடம் போனது, பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசும் அரசியல் சக்திகள் கைக்கு சென்றது. ஆனால் 370 நீக்கம் என்பது அவர்கள் முதுகெலும்பை உடைத்தது.
70 ஆண்டுகால வாக்குறுதிகளை மோடி அரசு விரலசைவில் சாதித்து வருகிறது. சில வேளைகளில் 370 மற்றும் 35ஏ என்பதை ரத்து செய்யவே முடியாது என்று எங்கள் கட்சியினரே நினைத்தனர். இது இப்போது சாத்தியமாகியுள்ளது, இதன் மூலம் மக்களிடையே பாகுபாடு முடிந்து இந்தியாவுடன் அது முழுதும் இணைந்துள்ளது.
இந்திய அரசியல் டிஜிட்டல் உலகிற்குள் நுழைந்து விட்டது, அதனால்தான் நிறைய மெய்நிகர் பேரணிகள் நடைபெறுகிறது. மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது, இந்தியாவின் மதிப்பு கூடியது.
கரோனா வைரஸ் பெருந்தொற்று கையாள்தல் பற்றி பலரும் விமர்சிக்கலாம் ஆனால் உலகச் சுகாதார அமைப்பு போன்றவை நம்மைப் பாராட்டுகின்றன.
லாக்டவுன் மட்டும் செய்யவில்லை எனில் நம் நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ” இவ்வாறு பேசினார் ராஜ்நாத் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT