Last Updated : 19 May, 2020 02:14 PM

 

Published : 19 May 2020 02:14 PM
Last Updated : 19 May 2020 02:14 PM

லாரி, நடைபயணமாக சென்னையிலிருந்து கிளம்பிய உ.பி. இளைஞர்: வீட்டிற்கு 100 கி.மீ. தொலைவில் வாரணாசியில் பலி

உத்தரப் பிரதேசத்தின் 3 இளைஞர்கள் சென்னையிலிருந்து நடைபயணமாகவும், கிடைத்தவரை லாரியிலும் கிளம்பி இருந்தனர். இவர்களில் ஒருவர் தம் வீட்டிற்கு 100 கி.மீ. தொலைவில் வாரணாசியில் நேற்று பலியானார்.

உ.பி.யின் ஆசம்கரில் உள்ள புவனா கிராமத்து இளைஞர்கள் தர்மேந்தர் யாதவ் (27), ஜெயப்பிரகாஷ் (26) மற்றும் பன்ச்சு குமார் (24). வாரணாசி மாவட்டத்தை சேர்ந்த இம்மூவரும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

கரோனா ஊரடங்கினால், மூவரும் சென்னையில் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால், தங்கள் கிராமம் சென்றுவிட விரும்பியவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்த ரயில்களில் செல்ல முடியவில்லை.

வேறு வழியின்றி சுமார் 2000 கி.மீ. தொலைவுள்ள தங்கள் கிராமங்களுக்கு நடந்தே செல்ல முடிவு எடுத்தவர்கள் வழியில் கிடைத்த லாரிகளிலும் சிறிது தூரம் பயணம் செய்துள்ளனர். நேற்று காலை வாரணாசி மாவட்ட எல்லையின் மொஹவ் பைபாஸ் நெடுஞ்சாலையில் நுழைந்தனர்.

இதன் பிறகு நுழைந்த நிம்மதியில் அவர்களால் பெருமூச்சு விட முடிந்தது. லாரி, நடை எனப் பயணக் களைப்பு தீர, ஆசம்கர் காவல்துறை சோதனைச் சாவடி அருகே சற்று ஓய்வெடுத்துள்ளனர். அப்போது, தர்மேந்தர் யாதவ், திடீர் என மயக்கமாகி விழுந்துள்ளார். இதைக் கண்டு மற்ற இருவரின் அலறல் கேட்டு சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறையினர் வந்தனர்.

அருகிலுள்ள சோலாபூரின் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றபோது வழியிலேயே தர்மேந்தர் உயிர் பிரிந்துள்ளது. இங்கிருந்து தர்மேந்தரின் வீடு சுமார் 100 கி.மீ. தூரம் ஆகும்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் சோலாபூர் காவல் நிலைய ஆய்வாளரான ஹரி நாராயண் பட்டேல் தொலைபேசியில் கூறும்போது, ‘‘ சென்னையில் இருந்து அதிக தூரம் நடந்தும், கிடைத்த இடத்தில் டெம்போ, லாரியிலும் பயணித்துள்ளனர். இதனால் மிகவும் களைத்த உடலால் உயிர் பிரிந்திருக்கலாம் என மருத்துவர்களுக்குச் சந்தேகம் உள்ளது’’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தர்மேந்தரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான பயணம் மற்றும் ஈமக்காரியத்திற்கான செய்ய முடியாதவர்களுக்கு சோலாபூர் காவல் நிலையத்தினர் பணம் வசூல் செய்து அளித்துள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் 3 இளைஞர்களில் ஒருவரான ஜெயப்பிரகாஷ் தொலைபேசியில் கூறும்போது, ‘‘வழியில் காசில்லாமல் 3 வேளை உணவும் உண்ண முடியவில்லை. இது தர்மேந்தரின் உயிரைப் பறிக்கும் எனத் தெரிந்திருந்தால் பிச்சை எடுத்தாவது சாப்பிட்டிருப்போம்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x