Last Updated : 08 May, 2020 03:31 PM

 

Published : 08 May 2020 03:31 PM
Last Updated : 08 May 2020 03:31 PM

நாட்டின் மது நுகர்வில் 45 சதவீதம்; வருவாயில் 15 சதவீதம்:  5 மாநிலங்கள் என்னென்ன?

நாட்டின் ஒட்டுமொத்த மதுவகைகள் நுகர்விலும், மதுவகைகள் மூலம் தங்களின் வருவாயில் 15 சதவீதத்தையும் 5 தென் மாநிலங்கள் பெற்று கொடிகட்டிப் பறந்து வருகின்றன.

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்கள்தான் மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் மது நுகர்வில் முன்னணியில் திகழ்கின்றன. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்த 5 மாநிலங்களும் ஒரு சொட்டு மதுவைக் கூட விற்பனை செய்யாதது வியப்பாகும் என கிரிசில் நிறுவன ஆய்வு தெரிக்கிறது.

கிரிசில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது

''நாட்டில் ஆண்டுதோறும் விற்பனையாகும் மதுவில், நுகர்வில் 45 சதவீதத்தை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய 5 தென்மாநிலங்கள் தக்க வைத்துள்ளன. இதில் தமிழகம் மற்றும் கேரளா மாநில அரசுகள்தான் தங்கள் வருவாயில் அதிகபட்சமாக 15 சதவீதத்தை மதுவுக்கு வரிவிதிப்பின் மூலம் பெறுகின்றன.


கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் தனது வருவாயில் 11 சதவீதத்தையும், தெலங்கானா மாநிலம் 10 சதவீதத்தையும் பெறுகின்றன. டெல்லி அரசு மதுவகைகளுக்கு வரிவிதிப்பின் மூலம் 12 சதவீதத்தையும் பெற்றாலும் தேசிய அளவில் மது நுகர்வில் வெறும் 4 சதவீதத்தில் மட்டுமே டெல்லி இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாட்டிலேயே மது நுகர்வில் மிகப்பெரிய மாநிலமாக இருந்து வருகிறது. தேசிய அளவில் மது விற்பனையில் 13 சதவீதத்தையும் பெற்றுள்ள தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் கர்நாடக அரசு 12 சதவீதத்தில் உள்ளது.

தேசிய அளவில் மது விற்பனையில் 7 சதவீதமும், தெலங்கானா மாநிலம் 6 சதவீதமும், கேரள மாநிலம் 5 சதவீதமும் உள்ளன.

இந்த 5 மாநிலங்களில் கேரளாவை ஒப்பிடும் போது 4 மாநிலங்கள் அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ளன. ஆனால், வருவாய் அடிப்படையில் மது வகைகளுக்கு அதிகமான வரிவிதித்து கேரளா அதிக வருவாயைப் பெறுகிறது

மகாராஷ்டிரா மாநிலம் மதுவகைகளுக்கு அதிகமான வரிவிதித்த போதிலும் அதன் வருவாயில் அது 8 சதவீதம் மட்டுமே இருக்கிறது. தொழில் மாநிலமாக இருப்பதால் மதுவகைகளைக் காட்டிலும் மற்ற வகைகளில் வருமானம் அதிகம். மேலும் மக்கள் அடர்த்தி இருப்பதால் மது நுகர்வில் 8 சதவீதத்தை மகாராஷ்டிரா தக்கவைத்துள்ளது.

நாட்டில் 75 சதவீத மது விற்பனையில் 5 தென் மாநிலங்கள், டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் சேர்ந்து 75 சதவீத மது நுகர்வை வைத்துள்ளன.

கரோனாவைப் பொறுத்தவரையில் உயிரிழப்பிலும், பாதிப்பிலும் இந்த 12 மாநிலங்கள் சேர்ந்துதான் நாட்டில் 85 சதவீதம் பேரைக் கொண்டுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் 31.2 சதவீதம் நோயாளிகளை மகாராஷ்டிராவும், டெல்லி 10 சதவீதம், தமிழகம் 7.6 சதவீதம், மத்தியப் பிரதேசம் 7 சதவீதம், உத்தரப் பிரதேசம் 5.9 சதவீதத்தைக் கொண்டுள்ளன. இந்த 12 ஆண்டுகளில் கேரள மாநிலம் மட்டும்தான் ஒரு சதவீதம் கரோனா நோயாளிகளைக் கொண்டுள்ளது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x