Last Updated : 15 Apr, 2020 11:49 AM

 

Published : 15 Apr 2020 11:49 AM
Last Updated : 15 Apr 2020 11:49 AM

2-வது கட்ட லாக்டவுன்: தடை செய்யப்பட்ட 12 முக்கிய நடவடிக்கைகள் : மத்திய அரசு புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த லாக்டவுன் 2-வது கட்டமாக மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இந்த காலக் கட்டத்தில் எந்த துறைகளுக்கு அனுமதி, தடை என்பது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல்கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். அந்த 21 நாட்கள் நேற்றுடன் முடிந்தது. ஆனாலும் கரோனா வைரஸின் தாக்கம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள். முதல்கட்ட லாக்டவுன் காலத்தில் வேளாண் செயல்பாடு, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள், சிறுதொழில்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்தார்கள்.

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கடந்தவாரம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பெரும்பாலான முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர்.

இதன் படி நேற்று மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்கப்படும் என்றும், வரும்20-ம் தேதிக்குபின் கரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பொருளாதார செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்தார். அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது. இதில் வரும் 20-ம் தேதி்க்கு பின் எந்தெந்த தொழில்கள் செயல்படலாம் , யாருக்கெல்லாம் விலக்கு போன்றவையும், மே 3ம் தேதிவரை எந்தெந்த தொழில்கள், இடங்களுக்கு தடையும் விதித்து அறிவித்துள்ளது.

அதன்படி மே 3-ம் தேதிவரை தடை நீக்கப்படும் தொழில்கள், செயல்பாடுகளை வழங்கப்பட்டுளன. அவை பின்வருமாறு:

  1. பாதுகாப்பு காரணங்களைத் தவிர அனைத்து விதமான உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் விமானப் போக்குவரத்து அனைத்தும் மே3-ம் தேதிவரை தடை ெசய்யப்படுகிறது
  2. பாதுகாப்பு காரணங்களைத் தவிர அனைத்து விதமான பயணிகள் ரயில்போக்குவரத்தும் மே3-ம்தேதிவரை தடை செய்யப்படுகிறது
  3. பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது
  4. தனிமனிதர்கள் மாவட்டங்களுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே வாகனங்களில் பயணிப்பதும் தடை செய்யப்படுகிறது. மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே பயணிக்க அனுமதியுண்டு
  5. வரும் மே 3-ம் தேதிவரை நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்படும்.
  6. மத்தியஅரசு அளித்துள்ள விதிவிலக்கு பட்டியலில் இருக்கும் தொழில்களைத் தவிர மற்ற அனைத்து தொழில்களும், வர்த்தகச் செயல்பாடுகளும் மே3-ம் தேதிவரை தடை செய்யப்படுகிறது
  7. மத்தியஅரசு அளித்துள்ள விதிவிலக்கு பட்டியலில் இருக்கும் சேவைத்துறையைத் தவிர மற்ற சேவைத்துறை நிறுவனங்கள் வரும் மே3-ம் தேதிவரை தடை செய்யப்படுகிறது
  8. வாடகைக் கார்கள், ஆட்டோரிக்சா, சைக்கிள் ரிக்சா போன்ற அனைத்தும் மே3-ம் தேதிவரை இயக்கத்தடை
  9. திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், உடற்பயிற்சிக்கூடம், விளையாட்டு அரங்குகள், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்கா, மதுபார், மிகப்பெரிய அரங்கம், மக்கள் கூடுமிடங்கள் ஆகியவற்றுக்கு மே 3-ம் தேதிவரை தடை
  10. அனைத்து சமூக, அரசியல், மதம், விளையாட்டு, கல்வி, கலாச்சார விழாக்கள், கூட்டங்கள் நடத்த மே 3-ம் தேதிவரை தடை
  11. அனைத்து விதமான மதவழிபாட்டு தலங்களும் மே 3-ம் தேதிவரை மூடப்படும், பொதுமக்கள் கூடி வழிபாடு நடத்த தடை விதிக்கப்படுகிறது
  12. துரதிர்ஷ்டமாக துக்க வீடுகளில் இறுதிச்சடங்குகள் நடக்கும் போது 20 பேருக்கு மேல் பங்கேற்கத் தடை விதிக்கப்படுகிறது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x