Published : 03 Apr 2020 05:17 PM
Last Updated : 03 Apr 2020 05:17 PM

மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

கரோனா தொற்றை தடுக்க மருத்துவ பணியாளர்கள் கடும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க முடியாது எனவும், உடனடியாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் 21நாட்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் கடந்த 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இன்று ஊரடங்கு உத்தரவில் 9-வது நாளை மக்கள் எட்டியுள்ளார்கள். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மக்களில் பெரும்பான்மையினர் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கின்றனர்.

இந்தநிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் 2,301 ஆக அதிகரித்துள்ளது. 157 பேர் குணமடைந்தனர். அதேசமயம் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 2,301 கரோனா வைரஸ் நோயாளிகளில் 55 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஹைதராபாத், டெல்லி, காசியாபாத் உட்பட பல நகரங்களல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் சிலர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது.

இதுமட்டுமின்றி டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் உத்தரப் பிரதேசம் காசியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜமாத் உறுப்பினர்கள் மருத்துவர்களிடம் தவறாக நடந்தும், மதிப்புக்குறைவாகவும் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மருத்துவமனை சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறை இணைச் செயலாளர் புனியா சாலியா ஸ்ரீவத்சவா இதுகுறித்து இன்று கூறுகையில் ‘‘கரோனா தொற்றை தடுக்க மருத்துவ பணியாளர்கள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுகாதார ஊழியர்களும் கடும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த சூழலில் அவர்களுக்கு மற்றவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாறாக அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க முடியாது.உடனடியாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கடிதம் எழுதியுள்ளோம்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x