Last Updated : 12 Mar, 2020 05:35 PM

 

Published : 12 Mar 2020 05:35 PM
Last Updated : 12 Mar 2020 05:35 PM

தன் பங்கை தமிழக அரசு அளிக்காமல் நிர்பயா நிதியை பயன்படுத்த முடியாத நிலை –கனிமொழி கேள்விக்கு அமைச்சர் கட்கரி மக்களவையில் பதில் 

தனது 40 சதவிகிதப் பங்கை தமிழக அரசு அளிக்காமையால் அம்மாநிலத்தில் நிர்பயா நிதியை சாலைப் பாதுகாப்பிற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலை இன்று மக்களவையில் கனிமொழி கருணாநிதி சாலைப்போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கானப் பதிலில் மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று கேள்வி நேரத்தில் அளித்த பதிலில் கூறியதாவது: நிர்பய்யா நிதிக்காக தமிழகத்திற்கு 20.35 கோடி ரூபாய் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பிரச்சனை என்னவெனில் அதில் தனது பங்கான 40 சதவிகித நிதியை தமிழக அரசு இன்னும் ஒதுக்கவில்லை.

தமிழகம் போல், தன் பங்கை ஒதுக்காமல் இருப்பதே நிருபய்யா நிதியின் அடிப்படை சிக்கலாகப் பல மாநிலங்களில் உள்ளது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது அவசியம் ஆகும். இதற்கு நூறு சதவிகித நிதியையும் மத்திய அரசு ஒதுக்க வேண்டி இருக்கும்.

இந்த நிதியானது குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறையை சார்ந்தது. எனவே, அதன் மீது அத்துறையின் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இராணியுடன் ஆலோசனை செய்த பின் முழு நிதியையும் ஒதுக்குவது குறித்து தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக மக்களவையின் திமுக எம்.பிக்கள் குழுவின் துணைத்தலைவரான கனிமொழி சாலைகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதில் அவர், தமிழகம் உள்ளிட்ட நாட்டின் ஒரு பகுதி மாநிலங்களில் நிருபய்யா நிதியை பயன்படுத்தாமல் உள்ளன எனவும் இதற்காக வெளியான கடைசி நிதியில் என்ன செய்வது என்றறியாமல் தவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

பெண்கள் பாதுகாப்பை பொறுத்தவரை தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அறிய விரும்புவதாகவும் தூத்துக்குடி எம்.பியான கனிமொழி, மக்களவையில் வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x