Published : 08 Mar 2020 11:23 AM
Last Updated : 08 Mar 2020 11:23 AM
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கொடியாத்தூர், வெங்கேரி ஆகிய 2 கிராமங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் 3 நாட்களுக்கு முன் கோழிகள் இறக்கத் தொடங்கின. அவற்றின் மாதிரிகளை போபாலில் உள்ளதேசிய ஆய்வகத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள கால்நடைத் துறை உயரதிகாரி ஒருவர் நேற்று கூறினார்.
மேலும் 2 கிராமங்களிலும் உள்ள கோழிகள், வாத்துகள் மற்றும் பிற வளர்ப்பு பறவைகளை கொல்லும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
இந்நிலையில் பறவைக் காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் அவற்றை ஒருங்கிணைக்கவும் மாநில வனம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் கே.ராஜுதலைமையில் திருவனந்தபுரத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் கே.ராஜூ கூறும்போது, “பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு உயர்நிலைக்குழு சென்றுள்ளது. மக்கள் பீதியடைய வேண்டாம். நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். அனைத்து கால்நடை பண்ணைகளிலும் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும்” என்றார்.
கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு கடந்த மாதம் ஏற்பட்ட கோவிட்-19 காய்ச்சலை அம்மாநிலம் வெற்றிகரமாக எதிர்கொண்டது. 3 பேரும் குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT