Published : 07 Mar 2020 05:10 PM
Last Updated : 07 Mar 2020 05:10 PM

யெஸ் வங்கி பிரச்சினை: திருப்பதி ஏழுமலையான் தப்பித்தார்; சிக்கலில் ஒடிசா பூரி ஜெகந்நாதர்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில் சில மாதங்களுக்கு முன்புதான் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் தாங்கள் செய்திருந்த ரூ.1,300 கோடி டெபாசிட்டை திரும்பப் பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஒடிசாவில் இருக்கும் ஸ்ரீ பூரி ஜெகந்நாதர் கோயில் நிர்வாகம் டெபாசிட் செய்து சிக்கிக்கொண்டது.

தனியார் வங்கியான யெஸ் வங்கி, தற்போது கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளது. ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்கு மேல் கடன் அளித்துள்ளது. இதனால் வாராக்கடன் அதிகமாகி முதலீட்டாளர்களுக்குப் பணம் கொடுக்க முடியாத சூழலில் யெஸ் வங்கி சிக்கியுள்ளது.

இதையடுத்து யெஸ் வங்கியைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்ட ரிசர்வ் வங்கி முதலீட்டாளர்களின் பணத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்துள்ளது.

அதேசமயம், வங்கியில் இருந்து டெபாசிட் தாரர்கள் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் எனக் கட்டுப்பாடு வைத்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சமும், கவலையும் சூழ்ந்துள்ளது.

ஆனால், யெஸ் வங்கி இதுபோன்ற இக்கட்டான நிதி நெருக்கடிக்குச் செல்லும் என உணர்ந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாகிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் யெஸ் வங்கியில் இருந்த ரூ.1,300 கோடி டெபாசிட்டை திரும்பப் பெற்றுள்ளார்கள்.

திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவரும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராக ஒய்வி சுப்பா ரெட்டி தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து பணம் முழுவதையும் எடுக்கும்படி, நிர்வாகிகள் கூட்டத்தில் கூறியுள்ளார். அதன்படி தேவஸ்தானம் விரைவாகச் செயல்பட்டு ரூ.1,300 கோடி டெபாசிட்டை எடுத்துள்ளது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேவஸ்தான நிர்வாகிகள் கூட்டத்தில் யெஸ் வங்கியில் இருந்த டெபாசிட்டை எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், டெபாசிட்டை அவ்வப்போது எடுத்து மாற்றுவது என்பது வழக்கமான நடைமுறைதான். சில வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்கள் முதிர்ச்சியடைந்ததால், எடுப்போம். அதேபோன்றுதான் இந்தப் பணமும் எடுக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தேவஸ்தானம் சார்பில் எடுக்கப்பட்ட முடிவு எடுத்துக் கூறப்பட்டது. அப்போது மக்கள் காணிக்கையாகக் கொடுத்த பணத்துக்கு எந்தவிதமான பிரச்சினையும் வரக்கூடாது என்று அறிவுறுத்தியதால், விரைவாகச் செயல்பட்டு டெபாசிட்டை திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ளது.

ஒடிசா புவனேஷ்வரில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோயில்: கோப்புப்படம்

ஆனால், ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள ஸ்ரீ பூரி ஜெகந்நாதர் கோயில் நிர்வாகம் யெஸ் வங்கியில் டெபாசிட் செய்து சிக்கிக்கொண்டது.

ஸ்ரீ பூரி ஜெகந்நாதர் கோயில் நிர்வாகம் யெஸ் வங்கியில் ரூ.547 கோடி டெபாசிட் செய்த நிலையில் இப்போது பணத்தை எடுக்க முடியாமல் சிக்கலில் இருக்கிறது. ஏற்கெனவே யெஸ் வங்கி ரூ.47 கோடியைப் பூரி ஜெகந்நாதர் கோயில் நிர்வாகத்துக்கு அளித்துள்ளது. மீதமுள்ள பணத்தை மார்ச் 19-ம் தேதி, 23-ம் தேதி, மற்றும் 29-ம் தேதி ஆகிய தேதிகளில் மூன்று தவணைகளாகப் பிரித்துத் தந்துவிடுவதாக யெஸ் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இப்போது யெஸ் வங்கி ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால், ஜெகந்நாதர் கோயில் நிர்வாகத்துக்கு உரிய தேதியில் டெபாசிட் தொகை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x