Published : 07 Mar 2020 04:08 PM
Last Updated : 07 Mar 2020 04:08 PM

யெஸ் வங்கி மோசடி: ராணா கபூரிடம் அமலாக்கப்பிரிவு தீவிர விசாரணை

யெஸ் வங்கியில் நடந்த பண மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வங்கியின் நிறுவனர் ராணா கபூரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யெஸ் வங்கி தற்போது கடும்நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதன் நிதி மூலதனத்தை ஆர்பிஐ நிர்ணயித்த வரம்புக்குள் கொண்டுவர கடும் முயற்சியில் இறங்கி இருந்தது. மூலதனத்தை உயர்த்த ரூ.14,000 கோடி நிதி திரட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவில் முதலீடு வராத நிலையில் அந்த இலக்கை ரூ.10,000 கோடியாக குறைத்தது.

ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்குமேல் கடன் அளித்துள்ளது. இவற்றில் சில நிறுவனங்கள் திவால் நிலையில் உள்ளன. இதனால் யெஸ் வங்கியின் வாராக் கடன் கடுமையாக உயர்ந்தது.

தற்போது யெஸ் வங்கியின் கடன் சுமை ரூ.14,700 கோடியாக உள்ளது. இது வங்கியின் சொத்து மதிப்பில் 54.5% ஆகும். மேலும் யெஸ் வங்கியை காக்கும் பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் எடுத்து வருகின்றன.

அதன்படி, வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரையில் வங்கியிலிருந்து அதிகபட்சமாக பணம் எடுக்கலாம். மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதிவரை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் எஸ் வங்கி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் யெஸ் வங்கியில் நடந்த பல மோசடிகள் தொடர்பாக அதன் நிறுவனர் ராணா கபூரிடம் விசாரணை தொடங்கியுள்ளது. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று அவரை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

யெஸ் வங்கியில் நடந்த பண மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x