Published : 13 Feb 2020 03:13 PM
Last Updated : 13 Feb 2020 03:13 PM
லக்னோ நீதிமன்ற வளாகத்தில் வியாழனன்று (13-2-20) நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 வழக்கறிஞர்கள் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லக்னோ பார் அசோசியேஷன் இணைச் செயலர் சஞ்சிவ் குமார் லோதி தன்னை நோக்கித்தான் இந்த நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். நீதித்துறை அலுவலர்கள் மீது தான் புகார்கள் எழுப்பியதால் தன்னை மிரட்டுவதற்காகவே இந்த நாட்டு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தன்னுடைய அறக்கு வெளியேதான் 10 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர் இதில் தான் உட்பட 3 பேர் காயமடைந்ததாக சஞ்சிவ் குமார் லோதி தெரிவித்தார். “ஒரு குண்டுதான் வெடித்தது, 2 குண்டுகள் வெடிக்கவில்லை.” இதனையடுத்து பரபரப்பு ஏற்பட வெடிகுண்டு சிறப்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன. மோப்ப நாய்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பப் பட்டுள்ளன.
கடந்த மாதம் தங்கள் மீது தாக்குதல் நடப்பதாக உ.பி. வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்குப் பாதுகாப்பாக சட்டமியற்றும் வரை யாரும் பணிக்குச் செல்ல வேண்டாம் என்றும் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவுறுத்தியது.
ஜனவரி 7ம் தேதி சேகர் திரிபாதி (32) என்ற வழக்கறிஞர் லக்னோவில் 5 பேர் கொண்ட மர்மக் கும்பலாம் அடித்துக் கொல்லப்பட்டார். இதனையடுத்து இவரது உடலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்னதாக டிசமப்ர் 17ம் தேதியன்று பிஜ்னோர் சிஜேஎம் கோர்ட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியாக 2 போலீஸார் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும் வன்முறை, வெடிகுண்டு கலாச்சாரம் கேள்வி கேட்பாரின்றி பரவி வருவதாகவும் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
தவறவிடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT