Last Updated : 25 Aug, 2015 08:21 AM

 

Published : 25 Aug 2015 08:21 AM
Last Updated : 25 Aug 2015 08:21 AM

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு, திமுக தரப்புக்கு மேல்முறையீடு செய்யும் அதிகாரம் இல்லை: ஜெயலலிதா தரப்பு பதில் மனு தாக்கல்

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு, திமுக, சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் அதிகாரம் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதி மன்றம் நால்வருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு தாக் கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், நால்வரையும் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், ஆர்.கே. அகர்வால் அடங்கிய‌ அமர்வு, நால்வரையும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் தரப்பில் வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ணா, செந்தில், செல்வகுமார் ஆகியோர் நேற்று தலா 46 பக்கங்களைக் கொண்ட பதில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில், “சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை. இவ் வழக்கின் விசாரணை அமைப்பான தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மட்டுமே மேல்முறையீடு செய்யும் அதிகாரம் இருக்கிறது. கர்நாடக அரசுக்கு அரசு வழக்கறிஞரை நியமித்து, அம்மாநில எல்லைக்குள் வழக்கை நடத்தும் அதிகாரம் மட்டுமே இருக்கிறது.

எனவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள கர்நாடக அரசின் மனு விசாரணைக்கு ஏற்புடையதா என்பதை முதலில் ஆராய வேண்டும். அதன் பிறகே வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 136-வது பிரிவின்படி, கர்நாடக அரசின் மனுவை தள்ளு படி செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல திமுக, சுப்பிரமணி யன் சுவாமியின் மனுக்களுக்கு, “திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும், முதல் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமிக்கும் இவ்வழக்கில் தொடர்ச் சியான பங்களிப்பு இல்லை.

அரசியல் நோக்கத்தில், பழிவாங் கும் எண்ணத்துடன் வழக்கின் இறுதிக் கட்டத்தில் மட்டுமே இவர் கள் தலையீடு செய்தனர். குறிப்பாக இரு தரப்புக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யும் அதிகாரம் இல்லை” என தெரிவிக் கப்பட்டுள்ளது.

மேலும் திமுக தரப்பில் இந்தோதோஹா கெமிக்கல்ஸ், லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 6 தனியார் நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு, அந்த நிறுவனங்களின் சார்பாக வழக்கறிஞர் அபே குமார் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார். 50 பக்கங்கள் அடங்கிய அந்த மனுவில், “திமுக தரப்பு தனியார் நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் எவ்வித வழக்கும் தொடுக்கவில்லை.

இந்நிலையில் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தனியார் நிறுவனங் களுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மனுதாரர் அன்பழகனுக்கு அதிகாரம் இல்லை. எனவே அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x