Published : 28 Aug 2015 09:00 AM
Last Updated : 28 Aug 2015 09:00 AM
இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்திய போராட் டம் குஜராத்தில் கலவரமாக மாறியதற்கு, நரேந்திர மோடியின் வன்முறை அரசியலின் எதிரொலிதான் காரணம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீநகரில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி வன்முறை அரசியலை கடைப் பிடித்து வருகிறார். அதன் விளைவுதான் இப்போதைய குஜராத் கலவரம். வன்முறை அரசியலால் மோடி என்ற தனிநபர் மட்டுமே பலன் அடைந்து வருகிறார். இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை.
மக்கள் மத்தியில் வெறுப் புணர்வை விதைத்து சகோதரர் களுக்கு இடையே சண்டையை வளர்ப்பதுதான் மோடியின் அரசியல். இதனால் நாடு வளர்ச்சி அடையாது. காங்கிரஸை பொறுத்தவரை அனைவரையும் அரவணைத்து செல்லும் அரசி யலையே கடைப்பிடித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் முன்மாதிரி எப்படி என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் ஆகியவை பாதிக்கப்படும்போது அரசை நோக்கி மக்கள் கேள்வி எழுப்புவது இயல்பானது.
சமுதாயத்தில் முன்னேறிய படேல் சமூகத்தினரே இப்போது அரசுக்கு எதிராக கிளர்ந் தெழுந்திருப்பது மோடியின் ‘குஜராத் முன்மாதிரி’ தோல்வி அடைந்திருப்பதை நிரூபித் துள்ளது.
படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சமஉரிமை மறுக்கப்பட்டதே இப்போதைய பிரச்சினைக்கு காரணம். கலவரத்தின்போது போலீஸாரின் அராஜக நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜாட் சமூகத்தினர் ஆதரவு
படேல் சமூகத்தினரின் போராட்டத்துக்கு ஹரியாணாவைச் சேர்ந்த ஜாட் சமூகத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜாட் சமூகத்தினரும் தங்களை ஓ.பி.சி. பிரிவில் சேர்க்கக் கோரி நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் முதல் அமைதி வழியில் போராடுவோம் என்று அந்த சமுதாய தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT