Published : 20 Dec 2019 07:50 PM
Last Updated : 20 Dec 2019 07:50 PM
மேற்குவங்க, கேரளா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது ஆகையால் தங்கள் மாநிலங்களில் அமலாக்கம் செய்ய முடியாது என்று அறிவித்ததையடுத்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், மாநில அரசுகள் மறுக்க அதிகாரமில்லை என்று தெரிவித்தார்.
அரசியல் சட்டம் 7வது பிரிவின்படி குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிசிஏ) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல் செய்ய மாட்டோம் என்று மாநில அரசுகள் மறுப்பதற்கான அதிகாரம் இல்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசியல் சட்டம் 7ம் பிரிவில் மத்தியப் பட்டியலின் கீழ் மொத்தம் 97 உருப்படிகள் உள்ளன. இதில் பாதுகாப்பு, வெளிவிவகாரம், ரயில்வே, குடியுரிமை, மற்றும் இயல்புரிமையாக்கம் ஆகியவையடங்கும்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) பற்றி கூறும்போது, என்பிஆர் நடைமுறை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் (சென்சஸ்) இணைக்கப்படும். இது குடியுரிமைச் சட்டத்தின் படி நடைபெறும் என்பதால் எந்த மாநிலமும் இதை அமல்படுத்த மாட்டோம் என்று கூற அதிகாரமில்லை என்றார் அந்த மூத்த அதிகாரி.
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமக்களும் என்பிஆர்-ல் பதிவு செய்வது கட்டாயமாகும். வழக்கமான குடியிருப்புவாசி என்பது எப்படி விளக்கப்படுகிறது என்றால் எந்த ஒரு பகுதியிலும் 6 மாதக் காலக்கட்டம் அல்லது அதற்கு மேல் வசித்து வருபவர்கள் அல்லது அடுத்த 6 மாதக் காலக்கட்டத்துக்கு அதே பகுதியில் வசிக்க முடிவெடுப்பவர் என்று விளக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயன் குடியுரிமைச் சட்டத்துக்கு தங்கள் மாநிலத்தில் வேலையில்லை என்று நிராகரித்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறும்போது, “உங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் வளர்ச்சி பற்றி இல்லாமல் தேசத்தைத் துண்டாட வாக்குறுதி அளித்துள்ளீர்கள். மதத்தின் அடிப்படையில் ஏன் குடியுரிமை? என்னால் ஏற்க முடியாது. உங்களை எச்சரிக்கிறேன். பலவந்தமாக லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் எண்ணிக்கைப் பலத்தை கொண்டு நிறைவேற்றலாம், ஆனால் நாங்கள் நாட்டைத் துண்டாட அனுமதியோம்” என்றார். அதேபோல் என்பிஆர் நடைமுறையையும் செய்ய மாட்டோம் என்றார் பானர்ஜி.
இந்நிலையில் மாநிலங்கள் இந்த இரண்டையும் அமல்செய்ய மாட்டோம் என்று மறுக்க அதிகாரமில்லை என்று கூறுகிறார் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT