Published : 09 Nov 2019 01:36 PM
Last Updated : 09 Nov 2019 01:36 PM
நாக்பூர்
பிரச்சினைகளை மறப்போம், அனைவரும் ஒன்றிணைந்து ராமர் கோயில் கட்டுவோம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியதாவது:
''அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்தியஸ்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. தாமதமானாலும் சிறந்த தீர்ப்பு கிடைத்துள்ளது.
சர்ச்சைக்குரிய நிலம் தற்போது அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இருந்து வரும் மோதலுக்குத் தீர்வு வேண்டும் என விரும்பினோம். தற்போது அந்தத் தீர்வு கிடைத்துள்ளது. எங்கள் விருப்பம் நிறைவேறியுள்ளது.
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை யாரும்ம் வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருத வேண்டாம். கடந்த காலங்களில் நடந்த பிரச்சினைகளை மறப்போம். அனைவரும் ஒன்றிணைந்து ராமர் கோயில் கட்டுவோம்''.
இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT