Published : 11 Oct 2019 10:20 AM
Last Updated : 11 Oct 2019 10:20 AM

குளிர்கால சீசனுக்கு தயாராகிறது காஷ்மீர்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க திட்டம்

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வரும் நிலையில் அங்கு குளிர்கால சுற்றுலாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீண்டும் லட்சக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மாநில அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு 370-வது பிரிவை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திரும்பப்பெற்றது மத்திய அரசு. இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொலைத்தொடர்பு இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியதும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

அமைதி நிலவ தொடங்கியதால் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை படிப்படியாக விடுவிக்கும் நடவடிக்கையை காஷ்மீர் அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 4 முக்கிய அரசியல் தலைவர்களை காஷ்மீர் அரசு நேற்று விடுதலை செய்தது.

இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் மழைகாலம் முடிந்து குளிர்காலம் தொடங்கவுள்ளது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முன்பு காஷ்மீருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். ஆனால் தீவிரவாத பாதிப்புக்கு பிறகு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருந்தது.

இதுமட்டுமின்றி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

தற்போது அங்கு நிலைமை சீரடைந்து வருவதால் மீண்டும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் விரிவான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது.

இதுகுறித்து காஷ்மீர் மாநில திட்டத்துறை முதன்மைச் செயலாளர் ரோஹித் கன்சால் கூறுகையில் ‘‘காஷ்மீரில் பாதுகாப்புக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முற்றிலமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியிடப்பட்ட ஆலோசனை அறிவிப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

காஷ்மீர் வரும் சுற்றுலா பயணிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த குளிர்கால சீசனில் அதிகஅளவிலான சுற்றுலா பயிணகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x