Published : 20 Aug 2019 11:42 AM
Last Updated : 20 Aug 2019 11:42 AM
பெங்களூரு
கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாகப் பதவியேற்ற 17 அமைச்சர்களுக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கர்நாடகாவில் முன்பு குமாரசாமி தலைமையிலான ஆட்சியில் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காததால் 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த ஜூலை 23 -ம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து, புதிய முதல்வராக எடியூரப்பா ஜூலை 26 -ல் பதவியேற்றார்.
எடியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்று 20 நாட்களுக்கு மேலாகியும் அமைச்சர்கள் நியமிக்கப்படாததால் காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அதே வேளையில் பாஜக மூத்த தலைவர்களும், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அதிருப்தி எம்எல்ஏக்களும் அமைச்சரவையில் இடம் பிடிக்க ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்புச் செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கலந்துரையாடினார்.
அப்போது யார் யாருக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது, மூத்த தலைவர்களுக்கு எந்தத் துறையை ஒதுக்குவது, சாதி வாரியாக எத்தனை பேருக்கு வாய்ப்பு அளிப்பது, மாவட்டங்கள் வாரியாக யாருக்கு இடமளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
முதல்கட்டமாக 25 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை எடியூரப்பா பாஜக மேலிடத்தில் வழங்கினார். இதனைப் பரிசீலித்த அமித் ஷா முதல்கட்டமாக 17 பேர் அடங்கிய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் வாஜூபாய் வாலா 17 பேருக்கு அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாஜக மூத்த தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டார், ஈஸ்வரப்பா, சிடி ரவி, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT