Last Updated : 14 Jul, 2015 09:23 AM

 

Published : 14 Jul 2015 09:23 AM
Last Updated : 14 Jul 2015 09:23 AM

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து 6 நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட லெக்ஸ் பிராப் பர்ட்டீஸ் உள்ளிட்ட 6 தனியார் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்ட‌தை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நேற்று உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல் முறை யீட்டு மனு தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது 1996-ம் ஆண்டு தொடுக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் 32 தனியார் நிறுவனங்கள் இணைக் கப்பட்டன. தனியார் நிறுவனங்க ளின் சொத்துக்கள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கும், அவரது பினாமிகளுக்கும் சொந்தமா னவை என தமிழக லஞ்ச ஒழிப் புத்துறை போலீஸார் குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந் தனர். இதையடுத்து, இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தனியார் நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா, “சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 32 தனியார் நிறுவனங்களும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வ‌ருக்கும் சொந்த மானவை. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் நிலம், பல்வேறு இடங்களில் உள்ள கட்டிடங்கள், அலுவலகங்கள், இயந்திரங்கள், வாகனங்கள் அனைத்தும் பினாமியின் பெயரில் வாங்கப்பட்டுள்ளன. எனவே அந்த நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்” என கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து லெக்ஸ் பிராப் பர்ட்டீஸ், மெடோ அக்ரோ ஃபார்ம், ரிவர்வே அக்ரோ ஃபார்ம், ராம்ராஜ் அக்ரோ ஃபார்ம், ஆஞ்சநேயா பிரிண்ட்டர்ஸ், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் ஆகிய 6 தனியார் நிறுவனங்கள் மட்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்தன. இதை விசாரித்த நீதிபதி சி.ஆர்.குமார சாமி, “6 தனியார் நிறுவனங்களும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வ ருக்கு சொந்தமானவை அல்ல. எனவே அதன் சொத்துக்களை வழக்கில் இருந்து விடுவிக்கிறேன்” என கடந்த மே 11-ம் தேதி உத்தரவிட்டார்.

திமுக மேல்முறையீடு

இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம் நேற்று உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு மேல் முறை யீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து 6 நிறு வனங்கள் விடுவிக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை. நீதிபதி குன்ஹா வின் தீர்ப்பில், “தனியார் நிறு வனங்களின் சொத்துக்கள் ஜெய லலிதா உள்ளிட்ட நால்வருக்கும் சொந்தமானவை. நால்வரும் அந்த நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நிறுவனங்களை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது” என தெரிவித்துள்ளார். எனவே நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் 6 தனியார் நிறுவனங் களின் சொத்துகளும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் சொந்த மானவை என்றும், அதில் உரிமை யாளர்களாக குறிப்பிடப்பட்டுள் ளோர் அனைவரும் ஜெய லலிதாவின் பினாமிகள் என்றும் அறிவிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களின் சொத்துக்கள் என சாட்சியம் அளிக்கக் கூடிய ஆவணங்கள் போலியானவை என உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட மனு எப்போது?

இதனிடையே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் விடுதலையை எதிர்த்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு மேல்முறையீட்டு மனுவில் 9 குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை, திருத்தும் பணியில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வி.ஜி. பிரகாசம் தலைமையிலான‌ திமுக வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் ஆராய்ந்து வருகிறது. அதை சரிபார்க்கும் பணிகள் முடிந்த பிறகு, கர்நாடக அரசின் மனுவுக்கு வழக்கு எண்கள் ஒதுக்கப்படும். அதன் பிறகே திமுக தரப்பு திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யும். அநேகமாக இவ்வார இறுதியில் அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x