Published : 22 Jul 2019 10:06 AM
Last Updated : 22 Jul 2019 10:06 AM
"நான் எம்.பி.யானது கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக அல்ல" என்று மத்தியப் பிரதேச மாநில பாஜக எம்.பி. ப்ரக்யா சிங் தாக்கூர் சர்ச்சைக் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநில போபால் தொகுதி எம்.பி. ப்ரக்யா தாக்கூர். இவர் ஷெஹோர் பகுதி பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஈடுபட்டார்.
அப்போது தொண்டர் ஒருவர் தனது பகுதியில் நிலவும் பொது சுகாதார அச்சுறுத்தல் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு ப்ரக்யா தாக்கூர், "நான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டது உங்கள் பகுதி கழிவறைகளையும், சாக்கடைக் கால்வாய்களையும் சுத்தம் செய்வதற்காக அல்ல. எனக்கான பணி என்னவோ அதை நான் சிரத்தையுடன் நேர்மையாக சிறப்பாக செய்வேன். மற்றபடி உங்கள் பகுதியில் உள்ள இதுபோன்ற சிறு சிறு பிரச்சினைகளை அதற்கான உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து முடித்துக் கொள்ளுங்கள். சாதாரண பிரச்சினைகளுக்கு எல்லாம் என்னை தொலைபேசியில் அழைக்காதீர்கள். மற்றபடி எனது வேலையை நான் நேர்மையாக செய்வேன். இதை நான் அன்றும் சொன்னேன், இன்றும் சொல்கிறேன், என்றும் சொல்வேன்" என்றார்.
தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையின் கீழ் பணிபுரியும் எம்.பி. ஒருவர் பொது சுகாதார பணியைத் தட்டிக் கழிப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
ப்ரக்யா தாக்கூர் இதுபோன்று பலமுறை சர்ச்சைக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேசபக்தர் எனக் கூறினார். இந்தக் கருத்துக்கு பிரதமர் மோடியே கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை மதிக்காமல் ப்ரக்யா கருத்து கூறியிருக்கிறார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தாரிக் அன்வர், "ப்ரக்யாவின் கருத்து தூய்மை இந்தியா திட்டத்தின் மீது அவர் கொண்டுள்ள மதிப்பீட்டையே காட்டுகிறது. ப்ரக்யா மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT