Last Updated : 23 Jul, 2015 08:48 AM

 

Published : 23 Jul 2015 08:48 AM
Last Updated : 23 Jul 2015 08:48 AM

மரண தண்டனைக் கைதிகள் மீண்டும் மீண்டும் கருணை மனு அனுப்புவது சட்ட நடைமுறைக்கு எதிரானது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தண்டனையைக் குறைக்கக் கோரி மீண்டும் மீண்டும் கருணை மனுக்களை அனுப்பவது சட்ட நடைமுறைகளை மீறுவதாக உள்ளது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரை விடுவித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், “கொலை வழக்கில் தண்டனை விதிக்கப் பட்டவர்கள் தங்கள் தண்டனை யைக் குறைக்கக் கோரி குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநருக்கு தொடர்ந்து கருணை மனுக்களை அனுப்பி வருவது சட்ட நடைமுறைகளை மீறுவதாக உள்ளது” என்றார்.

விசாரணையின்போது, நீதிபதிகள் எப்.எம்.ஐ.கலிபுல்லா, பினாகி சந்திர கோஷ், அபய் மனோகர் சாப்ரே மற்றும் யு.யு.லலித் ஆகியோரையும் உள்ள டக்கிய அமர்வு, தண்டனைக் கைதிகளின் கருணை மனு குடியரசுத்தலைவரால் நிராகரிக் கப்படும்போது, அவர்கள் ஆளுநரை அணுகலாமா என கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து பதிலளிக்குமாறு சொலிசிட்டர் ஜெனரலை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். கருணை மனுவை குடியரசுத்தலைவர் நிராகரித்த பிறகு, ஆளுநர் அந்த மனுவை ஏற்றுக் கொண்டு கைதியை விடுவித்தால் குடியரசுத் தலைவரின் அதிகாரம் வலுவிழந்து விடாதா என்றும் கேள்வி எழுப்பினர்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனை மனதில் வைத்து அவரது பெயரைக் குறிப்பிடாமல் நீதிபதிகள் இந்தக் கேள்வியை எழுப்பினர்.

இதுகுறித்து சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கூறும்போது, “மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டாலும், அதுகுறித்து சுழ்நிலைக்கேற்ப மாநில ஆளுநர் முடிவு எடுக்கலாம். எனினும், குடியரசுத்தலைவர், ஆளுநர் ஆகியோரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு மீண்டும் அவர்கள் கருணை மனு தாக்கல் செய்தால் குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி அவர்களின் தண்டனையைக் குறைக்க முடியாது” என்றார்.

அப்படியானால் இந்த விஷயத்தில் மாநில அரசுகள் ஏன் முடிவு எடுக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x