Last Updated : 16 Jul, 2015 03:19 PM

 

Published : 16 Jul 2015 03:19 PM
Last Updated : 16 Jul 2015 03:19 PM

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: கர்நாடக அரசு, திமுக மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு - 24-ம் தேதி பட்டியல் வெளியாகிறது

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக தரப்பு தாக்கல் செய்த சிறப்பு மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் வருகிற 24-ம் தேதி பட்டியலிடப்பட்டு, விசாரணை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுவித்து, நீதிபதி குமாரசாமி வெளியிட்ட தீர்ப்புக்கு தடைகோரும் மனுவை கர்நாடக அரசின் சார்பில் வழக்கறிஞர் எஸ். ஜோசப் அரிஸ்டாட்டில் கடந்த ஜூன் 23-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் தரப்பிலும் ஜெயலலி தாவின் விடுதலையை ரத்து செய்யக்கோரி மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சொத்துக்குவிப்பு வழக் கில் இணைக்கப்பட்ட லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 6 தனியார் நிறுவனங்களை விடுவித்ததை எதிர்த்தும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு மனுக்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம், திருத்தப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக அரசும், திமுக தரப்பும் திருத்தப்பட்ட மனுக்களை தாக்கல் செய்தன.

வழக்கு எண்கள் ஒதுக்கீடு

இம்மனுக்களை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்தது. கர்நாடக அரசு தாக்கல் செய்த சிறப்பு மேல்முறையீட்டு மனுவுக்கு குற்றவியல் வழக்கு எண்கள் ஒதுக்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குக்கு 11477/2015, சசிகலாவுக்கு 11478/2015, சுதாகரனுக்கு 11479/2015, இளவரசிக்கு 11480/2015 ஆகிய குற்றவியல் வழக்கு எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களுக்கும் குற்றவியல் வழக்கு எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒரே வழக்கு

கர்நாடக அரசு, திமுக தரப்பு மேல்முறையீட்டு மனுக்களை ஏற்றுக் கொண்டு, உச்ச நீதிமன்றம் அனைத்துக்கும் வழக்கு எண்கள் வழங்கியுள்ளதால் திமுக வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இம்மனுக்கள் விசாரணைக்கு வருவதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம், ''ஜெயலலிதா தரப்புக்கு எதிராக கர்நாடக அரசு தொடுத்துள்ள மூல மேல்முறையீட்டு வழக்குடன், திமுக தரப்பு தொடுத்துள்ள வழக்கும் இணைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு எதிரான திமுக தரப்பின் வழக்கும் மூல வழக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனவே ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு வருகிற 24-ம் தேதி விசாரணைக்கு பட்டியல் இடப்படும். அதனைத் தொடர்ந்து வழக்கை விசாரிக்கப் போகும் நீதிபதி, அமர்வு உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும்'' என அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x