Published : 01 Jul 2015 07:42 PM
Last Updated : 01 Jul 2015 07:42 PM
திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நடைமுறையைக் குறைக்கும் நடவடிக்கையில் இந்தியா மிதமான அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் 39.4 கோடி பேர் இந்த நடைமுறையை கைவிட்டுள்ளதாகவும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதியில் முன்னேற்றம்: 2015 நிலவரம் மற்றும் நூறாண்டு வளர்ச்சி இலக்கு மதிப்பீடு’ தொடர்பான அறிக்கையை ஐ.நா. குழந்தைகள் நிதியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை வெளியிட்டுள்ளன. அதன் விவரம்:
உலகம் முழுவதும் இன்னமும் 240 கோடி மக்கள் சுகாதார வசதியின்றி வசிக்கின்றனர். இதில் 94.6 கோடி மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் நடைமுறையை 25 சதவீதத்துக்கு மேல் குறைத்த 16 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் இந்த நடைமுறை 31 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 39.4 கோடி பேர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை கைவிட்டுள்ளனர். இது மிதமான செயல்பாடு ஆகும். அதேநேரத்தில் கடந்த 20 ஆண்டுகளில் ஏழை மக்களைப் பொருத்தவரை குறைந்த அளவிலேயே திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை கைவிட்டுள்ளனர்.
குடிநீர் வசதியைப் பொருத்தவரை இந்தியா தனது இலக்கை எட்டி உள்ளது. கடந்த 1990-ல் மொத்த மக்கள் தொகையில் 71 சதவீதத்தினருக்கு சுகாதாரமான குடிநீர் வசதி கிடைத்தது. இது இப்போது 94 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் பொது சுகாதார பிரிவு இயக்குநர் மரியா நீரா கூறும்போது, “உலகில் உள்ள அனைவருக்கும் சுகாதார வசதி மற்றும் தரமான குடிநீர் கிடைக்காதவரை தண்ணீர் தொடர்பாரன நோய் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT