Published : 01 Jun 2015 08:28 AM
Last Updated : 01 Jun 2015 08:28 AM
“இந்திய விமானப் படைக்கு 126 ரஃபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்கும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டம் சிக்கனமானது இல்லை. அந்த வகை விமானங்கள் நமக்குத் தேவையில்லை” என்று பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
“36 பிரான்ஸ் விமானங்களை மட்டுமே மத்திய அரசு வாங்கும். இந்த விமானங்கள் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும்” என்றும் அவர் கூறினார்.
டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 2 ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் 126 ரஃபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்கும் முந்தைய அரசின் திட்டத்தை மோடி அரசு ரத்து செய்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தனது பிரான்ஸ் பயணத்தின்போது அந்நாட்டிடம் 36 ஜெட் போர் விமானங்கள் வாங்கும் முடிவை அறிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று டெல்லியில் கூறும்போது, “பிரான்ஸ் விமானங்கள் வாங்கும் முடிவு அவசரத் தேவை கருதி எடுக்கப்பட்டது. இதில் 36 விமானங்களை மட்டுமே அரசு வாங்கும். 2 அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மூலம் இந்த விமானங்கள் வாங்கப்படும். ஒப்பந்தத்தை இறுதி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 3 மாதங்களில் இந்தப் பணி முடிவடையும்.
126 ரஃபேல் விமானங்கள் வாங்கும் முந்தைய அரசின் முடிவு அதிக செலவு கொண்டது. 10 -11 ஆண்டுகளில் ரூ. 1.3 லட்சம் கோடிக்கு மேல் நாம் செலுத்த வேண்டி வரும். இதனால் ராணு வத்தை நவீனமாக்கும் பிற பணிகள் தடைபடும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT