Published : 17 Jun 2015 05:42 PM
Last Updated : 17 Jun 2015 05:42 PM
இமாலயப் பகுதியில் உள்ள நதிகளின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளே நாட்டில் இயற்கைப் பேரழிவு ஏற்பட பெரும் காரணமாக அமைகிறது என்று ஆர்.எஸ்.எஸ். சாடியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா கூறும்போது, "அனைத்தையும் நுகர்வது என்ற பேராசையின் உந்துதலால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிக் கொள்கைகளுக்கு எதிராக இயற்கை பழிவாங்குகிறது" என்றார்.
“இயற்கை பேரழிவுகள் என்று நாம் அழைக்கப்படும் ஒன்றில் மனிதகுலத்தின் பங்கு என்ன என்பதை நாம் கவனிக்க வேண்டும். அணைகள் கட்டப்படுகின்றன, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக நாம் உருவாக்கும் பல கொள்கைகள் பல்வேறு அழிவுகளை தோற்றுவிக்கிறது. நாம் இது பற்றி சிந்திக்க வேண்டும்.
உத்தராகண்ட்டில் ஏற்பட்ட ‘இமாலயன் சுனாமி’ என்று அழைக்கப்படும் பெரும் நாசம், மற்றும் நிலச்சரிவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
“கேதார் நாத் நமக்கு அளித்துள்ள செய்தி என்னவெனில், இயற்கையைப் பாதுகாத்தால், அது நம்மைப் பேணிப் பாதுகாக்கும். 'என்னை சுரண்டினால் அதற்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டும்' என்று இயற்கை கூறுகிறது. இயற்கை வளங்களை தாறுமாறாக நாம் சுரண்டி வருகிறோம்.
கங்கை நதியைச் சுத்தம் செய்யும் திட்டம், போட்டோக்கள் எடுப்பது, பட்ஜெட் தொகையை செலவு செய்வது என்பதோடு நின்று விடாமல் தேசிய அளவில் விழிப்புணர்வு பெறச் செய்வது அவசியம். கங்கை நதியை காப்பதென்பது நாட்டின் மதம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் காப்பதாகும்.
இயற்கையைப் புறக்கணித்து, வாழ்வையும், நாட்டின் மதம் மற்றும் பண்பாட்டு, பாரம்பரியங்களை பாதுகாக்க முடியாது. இயற்கையை சுரண்டுவது பாவகாரியம்”என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT