Published : 20 May 2015 08:28 AM
Last Updated : 20 May 2015 08:28 AM
கர்நாடகத்தில் நடைபெற்றுவரும் சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் இன்னும் முடிவடை யாததால் வரும் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் ஹெச்.ஆஞ்சநேயா தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே முதன் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு பணி கர்நாடக மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கியது. 84 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தில் உள்ள பல தரப்பட்ட மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை தெரிந்து கொள்வதற்கான இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஹெச். ஆஞ்சநேயா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய சாதிவாரி கணக் கெடுப்பு கர்நாடகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகளும், மதவாத அமைப்புகள் கூறியவாறு எந்த தரப்பு மக்களும் இந்த கணக்கெடுப்பை புறக் கணிக்கவில்லை.
சில இடங்களுக்கு ஊழியர்கள் செல்லாத போதும், மக்களே தொடர்புக் கொண்டு தொலைபேசி வாயிலாகவே பதிவு செய்தார்கள்.
கடந்த 15-ம் தேதி வரை பெங்களூரில் 96.53 சதவீத கணக்கெடுப்பும், மாநிலம் முழுவதும் 99.45 சதவீத கணக்கெடுப்புப் பணியும் முடிவடைந்துள்ளது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக 1.25 லட்சம் அரசு ஊழியர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விடுபட்டவர்களைக் கண்டு பிடித்து கணக்கெடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக வரும் 27-ம் தேதி வரை கணக்கெடுப்புப் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு திரட்டப்பட்ட விவரங்கள் கணினியில் பதிவு செய்யும் பணிகள் வரும் ஜூன் 15-ம் தேதி வரை நடைபெறும்.
இதையடுத்து கணக்கெடுப்பு விவரங்களை பட்டியலிட்டு, 3 மாதங்கள் ஆய்வு செய்து முழுமையான சாதிவாரி விவரம் அரசிடம் ஒப்படைக்கப்படும். அதனைத் தொடர்ந்து புதிய நலத் திட்டங்கள் வகுக்கப் படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT