Published : 10 May 2015 04:37 PM
Last Updated : 10 May 2015 04:37 PM
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விவகாரத்தை முன்வைத்து, மாநிலங்களவை நடவடிக்கைகளை முடக்குவது என காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
நிதின் கட்கரி குடும்பத்தினருக்குச் சொந்தமான புர்த்தி சாகர் கர்கானா லிமிடெட் மானிய திட்டங்களுக்கான விதிகளை மீறியுள்ளது என்று தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் எழுப்பியது. இதனால் அவை 7 முறை ஒத்திவைக்கப்பட்டது. அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மே 13-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், மே 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களும் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மாநிலங்களவையில் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை சுட்டிக் காட்டி 23 நாட்கள் நாடாளுமன்ற அலுவல்களை பாஜக முடக்கியது.
அதே அணுகுமுறையை காங்கிரஸ் கட்சி தற்போது கடைப்பிடிக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக மாநிலங்களவை முடங்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT