Published : 19 May 2015 05:39 PM
Last Updated : 19 May 2015 05:39 PM
அசாம் மாநிலம் நகான் மாவட்டம் லகோவா என்ற இடத்தில் சுகோய்-30 ரக போர் விமானம் வெடித்துச் சிதறியது. எனினும், இதில் பயணம் செய்த விமானியும் துணை விமானியும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் போர் விமானம், திஸ்பூரின் சலனிபாரி விமானப்படை தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. இந்நிலையில் 12.30 மணியளவில் விமானப்படை தளத்தில் உள்ள ராடாருக்கும் விமானத்துக்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த விமானம் வெடித்துச்சிதறியது.
தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணமாக இருக்கலாம். எனினும், முன்னதாக, விமானத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு விமானிக்கும், துணை விமானிக்கும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர்கள் உயிர் தப்பினர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT