Last Updated : 11 May, 2015 08:12 AM

 

Published : 11 May 2015 08:12 AM
Last Updated : 11 May 2015 08:12 AM

ஜெயலலிதா வழக்கில் இன்று தீர்ப்பு: பெங்களூருவில் போலீஸ் குவிப்பு; காலை 11 மணிக்கு மேல் வெளியாகும்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஆயிரக்கணக்கான அதிமுகவின ரும் வழக்கறிஞர்களும் மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகளும் பெங்களூருவில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதால் பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஒரு கி.மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிக மாக ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த தாக வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

இதனிடையே நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்' என கால வரையறை நிர்ணயித்தது.

இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு சி.ஆர்.குமாரசாமி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜனவரி 5-ம் தேதி தொடங்கிய‌ மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 41 நாட்களில் நிறைவுபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 11-ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

பவானி சிங் நீக்கம்

இதனிடையே திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் நியமனம் செல்லாது. அவரது வாதங்களை தீர்ப்பு எழுதும்போது கருத்தில் கொள்ளக்கூடாது. திமுக தரப்பும் கர்நாடக அரசு தரப்பும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வமான வாதத்தை கருத்தில் கொண்டு தீர்ப்பு எழுத வேண்டும்' என உத்தரவிட்டது.

அதன்பேரில் ஜெயலலிதாவுக்கு எதிராக‌ திமுக தரப்பில் 81 பக்க எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய் யப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞ ராக ஆச்சார்யா மீண்டும் நியமிக்கப் பட்டு 18 பக்க எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து நீதிபதி குமாரசாமி, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டிய ஆவணங்கள், நீதிபதி குன்ஹாவின் 1,136 பக்க தீர்ப்பு, ஜெயலலிதா தரப்பு முன் வைத்த வாதம், சுப்பிரமணியன் சுவாமி, திமுக தரப்பு, அரசு தரப்பு முன் வைத்த எழுத்துப்பூர்வ வாதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு எழுதும் பணியை தொடங்கினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்த நீதிபதி குமாரசாமி, கூடுதலாக 15 நாட்கள் கால அவகாசம் பெற்று அனைத்து ஆவணங்களையும் சாட்சியங்களையும் வாதங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு எழுதியுள்ளார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சேம்பர் எண் 3-ல் இந்த தீர்ப்பு மிகவும் பாதுகாப்புடனும் ரகசியமாகவும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களின் உதவியுடன் 2 மாதங்களாக எழுதப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வரமாட்டார்

சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் தீர்ப்பு வெளி யாவதையொட்டி கர்நாடக உயர் நீதிமன்ற அறை எண்14 இன்று காலை 10.30 மணிக்கு கூடுகிறது. ஆனால் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார்கள் எனத் தெரிகிறது. அவர்களது தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார், மணிசங்கர், செந்தில், அசோகன் ஆகியோரும் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவும் திமுக தரப்பில் தாமரைசெல்வனும் ஆஜராகிறார்கள்.

நீதிபதி சி.ஆர்.குமாரசாமி காலை 11 மணிக்கு மேல், ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை அறிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து தீர்ப்பின் நகல் நால்வருக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாவதால் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக் கான அதிமுக தொண்டர்களும் அதிமுக வழக்கறிஞர்களும், முக்கிய நிர்வாகிகளும் பெங்களூருவில் குவிந்துள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களும் மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகளும் அங்கு முகாமிட்டுள்ளனர்.

இதனால் பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தை சுற்றி 1 கிமீ தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x