Published : 19 May 2015 04:11 PM
Last Updated : 19 May 2015 04:11 PM
தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பருவநிலை மாற்றம், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இதுகுறித்து பான் கி-மூனின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹன் ஹக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐ.நா. பொதுச் செயலாளர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பருவநிலை மாற்றம், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் புதிய நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இந்த 2015-ம் ஆண்டு சர்வதேச செயல்பாட்டுக்கான ஆண்டாக இருக்கும் என்று பான் கோடிட்டுக் காட்டினார்.
இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்றும் பான் நம்பிக்கை தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மோடி ட்விட்டரில் கூறும்போது, “சர்வதேச அளவிலான முக்கிய பிரச்சினைகள் குறித்து பான் கி-மூன் உடன் ஆலோசிக்கப்பட்டது” என்றார்.
சியோல் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆசிய தலைவர்கள் மாநாட்டில் பான் கி மூன் பேசும்போது, “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆசிய பிராந்தியத்தின் சிறந்த தலைவராக மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் சிறந்த தலைவராக விளங்குகிறார்” என புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்தியா நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஐ.நா.சபையின் 70-வது ஆண்டை குறிக்கும் வகையில், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் இந்த ஆண்டின் இறுதியில் உலக தலைவர்கள் ஒன்றுகூட உள்ளனர். அப்போது, பருவநிலை மாற்றம், தீவிரவாதம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT