Published : 21 May 2015 06:04 PM
Last Updated : 21 May 2015 06:04 PM
ஹுரியத் தலைவர் சையது அலி ஷா கிலானியின் பாஸ்போர்ட் கோரிக்கை தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"பாஸ்போர்ட் என்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமையாகும், இது உரிய நடைமுறைகளின் படி மத்திய உள்துறை அமைச்சகத்தினால் வழங்கப்படும் ஒன்றாகும். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் அவரது கோரிக்கை பரிசீலிக்கத்தகுந்த வகையில் சில நடைமுறைகளை பூர்த்தி செய்வது அவசியம். இது பற்றி உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் போது, நாங்கள் தகுதியின் அடிப்படையில் இதனை பரிசீலிப்போம்” என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
காஷ்மீரில் ஆளும் கூட்டணிகளான பாஜக, பிடிபி கட்சிகள் கிலானி பாஸ்போர்ட் தொடர்பாக கருத்து வேறுபாடுகளில் மூழ்கியுள்ளன.
மனிதாபிமான அடிப்படையில் கிலானிக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்கப்போவதாக பிடிபி கட்சி நேற்று தெரிவித்தது. ஆனால் அவர் தனது தேசவிரோத நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்டால்தான் பாஸ்போர்ட் வழங்க முடியும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
கிலானியும் அவரது குடும்பத்தாரும் ஜெட்டா செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்திருந்ததையடுத்து இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஆனால் இது தொடர்பாக கிலானி இன்னும் ஸ்ரீநகர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் சென்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை இன்னமும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. புதிய விதிமுறைகளின் படி பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிக்கும் நபர் நேரில் அலுவலகம் சென்று பயோமெட்ரிக் விவரங்களை அளிப்பது அவசியம்.
கிலானிக்கு 2007, 2008 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் ஒராண்டுக்கு மட்டும் செல்லத்தக்க பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT