Published : 30 Apr 2015 03:04 PM
Last Updated : 30 Apr 2015 03:04 PM
மத்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களை குறைப்பதாக விமர்சிக்கப்பட்ட பொதுக்கடன் மேலாண்மை முகமை (Public Debt Management Agency-PDMA) என்ற தனி அமைப்புக்கான திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக அறிவித்துள்ளது.
அரசுப் பத்திரங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை தற்காலிகமாக மத்திய ரிசர்வ் வங்கியே கவனிக்கும் என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
அரசின் நிதிக் கொள்கைகள் குறித்த முடிவுகளை எடுப்பதில் அரசுக்கு பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக பொதுக்கடன் மேலாண்மை முகமையை மத்திய அரசு 2015 நிதி மசோதாவில் அறிவித்திருந்தது. . அதாவது ஆர்.பி.ஐ.-யின் ஆலோசனைகள், தடைகள் இன்றி தனி அமைப்பாகச் செயல்பட முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதுபற்றிய பல்வேறு சர்ச்சைகள் காரணமாக இப்போதைக்கு கைவிடப்பட்டதாக அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
ஆனால், உலகளாவிய நடைமுறைகளை அனுசரித்து பொதுக்கடன் மேலாண்மைக்கான தனி அமைப்பை உருவாக்குவதில் மத்திய ரிசர்வ் வங்கி சிறந்த வரைபட மாதிரியை உருவாக்கித் தர மத்திய அரசு ஆலோசனை நடத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது பற்றி ஜேட்லி கூறும் போது, “பொதுக்கடன் மேலாண்மையை மத்திய ரிசர்வ் வங்கி கையாண்டு வரும் நிலையில், மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து விரிவான திட்டம் ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதன் மூலம் ஆர்.பி.ஐ-இடமிருந்து கடன் மேலாண்மை நிர்வாகத்தையும், சந்தை உள்கட்டமைப்பையும் தனியாகப் பிரித்து, ஒருங்கிணைந்த நிதிச் சந்தையை உருவாக்க முடியும்” என்றார்.
2015-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பொதுக்கடன் மேலாண்மை முகமையை தனியே உருவாக்குவது பற்றியும், அரசு கடன்பத்திரங்களை நிர்வகிக்கும் பொறுப்பை செபியிடம் ஒப்படைக்கும் முன்மொழிவை மேற்கொண்டார்.
இதனையடுத்து மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் இப்படிப்பட்ட திட்டத்தின் கால நேரம் குறித்தும், அதில் உள்ள இடர்பாடுகள், அனுகூலமின்மைகள் ஆகியவற்றை பல்வேறு பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று அருண் ஜேட்லி, “இந்த நிதியாண்டின் நிதி மசோதாவிலிருந்து பி.டி.எம்.ஏ. பிரிவுகளை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT