Last Updated : 23 Apr, 2015 03:52 PM

 

Published : 23 Apr 2015 03:52 PM
Last Updated : 23 Apr 2015 03:52 PM

காஷ்மீரில் கலவரத்தை தூண்டியதாக குற்றச்சாட்டு: பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மஸ்ரத் ஆலம் மீது வழக்குப் பதிவு

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் மஸ்ரத் ஆலம் மீது, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத் தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2010-ம் ஆண்டு பாதுகாப்புப் படையினருக்கும் வன்முறையாளர் களுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. அப்போது 110 பேர் பலியாயினர். இதையடுத்து காஷ்மீரில் கலவரத்தைத் தூண்டியதாக பிரிவினைவாதத் தலைவர் மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், காஷ்மீரில் மஜக - பாஜக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றது. அதன்பின், கடந்த மார்ச் 7-ம் தேதி மஸ்ரத் ஆலமை முதல்வர் முப்தி முகமது சயீது விடுதலை செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சிறையில் இருந்து வெளிவந்த மஸ்ரத் ஆலம் கடந்த 15-ம் தேதி காஷ்மீரில் பேரணி நடத்தினார். அதில் பங்கேற்ற இளைஞர்கள் பாகிஸ்தான் கொடியை ஏந்தியபடியும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டபடியும் சென்றனர். இதற்கு பல தரப்பில் இருந்து கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியது.

இதையடுத்து, கடந்த 17-ம் தேதி மஸ்ரத் ஆலமை போலீஸார் கைது செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீஸ் காவல் வரும் சனிக்கிழமையுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடந்த புதன்கிழமை மஸ்ரத் ஆலம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதன்படி மஸ்ரத் ஆலமுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட வாரன்ட் உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

மேலும் ஜம்மு பிராந்தியத் தின் கோட்பல்வால் சிறையில் மஸ்ரத் ஆலம் அடைக்கப்பட் டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x