Last Updated : 15 Apr, 2015 08:15 AM

 

Published : 15 Apr 2015 08:15 AM
Last Updated : 15 Apr 2015 08:15 AM

தான் உருவாக்கிய கட்சியிலிருந்தே வெளியேறுகிறார் யோகேந்திர யாதவ்

இருபெரும் தேசிய கட்சிகளுக்கு தோல்வியை அளித்துவிட்டு டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி உருவாக அடித் தளமாக அமைந்தது யோகேந்திர யாதவால் உருவாக்கப்பட்ட லோக் ராஜ்நீதி மன்ச் (மக்கள் அரசியல் அமைப்பு) என்ற அமைப்புதான்.

ஆக, ஆம் ஆத்மி கட்சி உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த யோகேந்திர யாதவே அக்கட்சியிலிருந்து வெளியேறு கிறார்.

ஹரியாணா மாநிலம் ரிவாடியில் 1963 செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தவர் யோகேந்திர யாதவ். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிக்கும்போது அவரிடம் உருவான சமூக சிந்தனை, அவர் பணியிலிருந்த போதும் வளர்ந்தது.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1985 முதல் 1993 வரை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியவர் பிறகு, டெல்லியின் சமூக வளர்ச்சிக்கான கல்வி மையத்தின் கவுரவ பேராசிரியராக தொடர்ந்தார். மனைவி மதுலிகா பானர்ஜி, டெல்லி பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

பல்வேறு தொலைக்காட்சிகளின் ஆங்கில செய்தி சேனல்களில் அரசியல் சார்ந்த விவாதங்களில் பங்கெடுத்தார் யோகேந்திர யாதவ். இந்த விவாதங்கள் அவரை சமூக அக்கறை கொண்ட அரசியல் ஆலோசகராக என அடையாளப் படுத்தின.

இதனால், மத்திய பல்கலைக் கழக மானியக்குழு, தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைந்த தேசிய ஆலோசனைக் கவுன்சில் உட்படப் பல்வேறு குழுக்களில் உறுப்பினராக பங்கு வகித்தார் யோகேந்திர யாதவ்.

கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதில் யோகேந்திர யாதவுக்கும் முக்கிய பங்கு இருந்தது. இந்த பின்னணியில், 2004-ம் ஆண்டில் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத் துவதற்காக தேசிய அளவில் பல்வேறு சமூக ஆர்வலர்களை இணைந்து, லோக் ராஜ்நீதி மன்ச் எனும் மக்கள் அரசியல் அமைப்பை உருவாக்கி நடத்தி வந்தார் யோகேந்தர் யாதவ்.

இந்த அமைப்பை கலைத்து முதுகெலும்பாக்கி உருவானதுதான் ‘ஆம் ஆத்மி கட்சி’ என யோகேந்திர யாதவின் ஆதரவாளர்கள் ‘தி இந்து’விடம் தெரிவித்தனர்.

அரசியல் ஆலோசனை

ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே டெல்லியில் தொடங்கிய உண்ணா விரதப் போராட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உட்படப் பலரும் கலந்து கொண்டனர். இதில், யோகேந்தர் யாதவ் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர் களுக்கு அவ்வப்போது அரசியல் ஆலோசனை அளித்து வந்தார்.

அப்போது ‘முடிந்தால் அரசியலுக்கு வந்து பாருங்கள்’ என அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த கபில் சிபல் விடுத்த சவாலை ஏற்க வேண்டிய கட்டாயம் ஹசாரே ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டது.

இதற்காக, கடந்த செப்டம்பர் 3, 2012-ல் ஹரியாணாவின் குர்காவ்னில் கேஜ்ரிவால் மற்றும் பூஷண் ஆதரவாளர்களுக்கும், யோகேந்தர் யாதவின் மக்கள் அரசியல் அமைப்பினருக்கும் இடையே முக்கிய சந்திப்பு நிகழ்ந் துள்ளது. இதில், புதிய அரசியல் கட்சி உருவாக்க எடுக்கப்பட்ட முடிவை ஏற்ற யாதவ், தான் தொடங்கிய அரசியல் அமைப்பை அதனுடன் இணைக்க முடிவு செய்தார். அவரது அமைப்பு பல மாநிலங்களில் இருந்ததால் அதன் நிர்வாகிகள் ஆம் ஆத்மியை எளிதில் பிரபலப்படுத்தினர்.

இவ்வாறு, ஆம் ஆத்மி கட்சியின் முதுகெலும்பாக கட்சியை வளர்த்தவருக்கு தற்போது பூஷணுடன் சேர்ந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அவர்களும் ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருப் பதாகவும் கருதப்படுகிறது.

ஏன் பிளவு

ஆம் ஆத்மி கட்சியின் தொடக்கம் முதலாக அதன் தேசிய அமைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால் தனித்து எடுத்த தாகக் கருதப்படும் முடிவுகளே அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆதரவை ஏற்று ஆட்சி அமைக்க எடுத்த முடிவு, 49 நாள் ஆட்சிக்கு பின் ராஜினாமா, மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சி உள்ளிட்ட கேஜ்ரிவாலின் தவறுகள் பிளவுக்கு வித்திட்டன என யோகேந்திர யாதவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, டெல்லி தேர்தலின் போது பணம் பெற்றுக்கொண்டு 12 பேருக்கு வாய்ப்பு அளித்ததே பிளவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

மக்களவை, ஹரியாணா தேர்தல்களில் போட்டியிட கேஜ்ரி வால் விருப்பத்துக்கு மாறாக யாதவ் தீர்மானம் கொண்டு வந்தார். அவை கடைசி நேரத்தில் திரும்பப்பெறப்பட்டது விரிசலை அதிகரித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x