Published : 02 May 2014 09:00 AM
Last Updated : 02 May 2014 09:00 AM

என்.சி.டி.சி. அமைப்பை ஏற்படுத்த வேண்டும்: ப.சிதம்பரம்

தீவிரவாதச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட தேசிய தீவிரவாதத் தடுப்பு மையத்தை (என்.சி.டி.சி.) ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

இந்த திட்டத்தை அமல்படுத்த ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது முயற்சி செய்தார். ஆனால், அதற்கு காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து அந்த அமைப்பை ஏற்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ப.சிதம்பரம், என்.சி.டி.சி. அமைப்பதன் அவசியம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாட்டில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகள் அனைத்தையும் என்.சி.டி.சி. அமைப்பு தடுத்திருக்கும் என நான் கூறவில்லை. அதே சமயம், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் தீவிரவாதிகளின் மூலத்தை அறிந்து நடவடிக்கை எடுக்க அந்த அமைப்பு உதவியிருக்கும். குறிப்பாக வெடிகுண்டுகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளோர், தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை கைது செய்ய முடிந்திருக்கும்.

தீவிரவாதச் செயல்களை தடுப்பதில் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. அப்பணியை ஒருங்கிணைத்து செயல்படுத்த என்.சி.டி.சி.யால் முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x