Published : 29 Mar 2015 12:30 PM
Last Updated : 29 Mar 2015 12:30 PM

ஆந்திரா, தெலங்கானாவில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம்

நாடு முழுவதும் நேற்று ஸ்ரீராம நவமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை தெலங்கானா மற்றும் ஆந்திர அரசுகளும் பக்தர்களும் விமரிசையாக கொண்டாடினர்.

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் புகழ்பெற்ற பத்ராசலம் தேவஸ்தானத்தில் நேற்று ஸ்ரீராம நவமி கொண் டாடப்பட்டது. இதனையொட்டி முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தம்பதியினர் பட்டு வஸ்திரங் களையும் முத்துக்களையும் காணிக்கையாக வழங்கினர். பின்னர் சீதாராமர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோன்று கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா பகுதியில் உள்ள சரித்திரப் புகழ் பெற்ற கோதண்டராமர் கோயிலில் நேற்று ஆந்திர அரசு சார்பில் ஸ்ரீராம நவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. வரும் 6-ம் தேதிவரை நடைபெற உள்ள இவ்விழாவில் கலந்து கொண்ட ஆந்திர மாநில துணை முதல்வர் கே.ஈ. கிருஷ்ணா ராவ் அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு வழங்கினார்.

பின்னர் கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “புதிய தலைநகரம் அமைய உள்ள மாவட்டத்துக்கு என்.டி.ராமா ராவ் பெயர் சூட்டப்படும். அதுபோல தலைநகருக்கு அமராவதி என்று பெயர் சூட்டுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதனை விரைவில் முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்” என்றார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் நேற்று ஸ்ரீராம நவமி ஆஸ்தானம் வெகு விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான சீதை, ராமர், லட்சுமணர் மற்றும் அனுமனுக்கு திருமஞ்சன சேவைகள் நடைபெற்றன. பின்னர் உற்சவ மூர்த்திகள், ஹனுமன் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x