Published : 14 Apr 2014 10:13 AM
Last Updated : 14 Apr 2014 10:13 AM
குஜராத் கலவரம் தொடர்பாக அப்போதைய பிரதமர் வாஜ் பாய்க்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எழுதிய கடிதங்களை வெளியிடலாமா என்பது குறித்து குஜராத் அரசு மற்றும் மோடியின் கருத்தை பிரதமர் அலுவலகம் கோரியுள்ளது.
2002 குஜராத் கலவரம் தொடர்பாக வாஜ்பாய், மோடி இடையே நடைபெற்ற கடித பரிமாற்றங்களின் நகல்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பிரதமர் அலுவலகத்தில் விண்ணப்பிக் கப்பட்டது. அந்த விண்ணப்பத்தை பிரதமர் அலுவலக தகவல் ஆணைய அதிகாரி எஸ்.வி.ரிஸ்வி நிராகரித்தார்.
கடிதங்களின் நகல்களை வெளியிடுவதால் குஜராத் கலவர விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தை சுட்டிக் காட்டி அந்த விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து பிரதமர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கலவரம் நடந்து 11 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் கடித நகல்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அந்த மேல்முறையீட்டில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விண்ணப்ப தாரருக்கு பிரதமர் அலுவலக தகவல் ஆணைய அதிகாரி ரிஸ்வி அளித்துள்ள பதிலில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கடித நகல்களை வெளியிடுவது தொடர்பாக குஜராத் அரசு மற்றும் அந்த மாநில முதல்வரின் கருத்து கோரப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் உரிய விளக்கம் அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT