Published : 19 Jan 2015 10:23 AM
Last Updated : 19 Jan 2015 10:23 AM
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே விமான சேவை புரிந்துவரும் ஒரே ஒரு விமானம் 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனமாகும். அது கடந்த 2005-ம் ஆண்டில் டெல்லி கன்னாட் ப்ளேஸில் அலுவலகத்துக்கான கட்டிடங்களை வாங்கியது.
அந்தச் சொத்துகளை வாங்கியதில் அந்நியச் செலாவணி சட்டம் மீறப்பட்டிருக்கிறது என்றும், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறவில்லை என்றும் குற்றம் சாட்டி, அமலாக்கத்துறை அந்த நிறுவ னத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள அந்த நிறுவனம், "சொத்துகள் வாங்கப்பட்ட அன்றே தேவையான அனைத்து அனுமதிகளைப் பெற்றுவிட்டோம். கடந்த பத்தாண்டுகளாக இங்கு விமான நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகம் இல்லாமல் இந்தியாவில் விமான சேவை மேற்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் தூதரக வட்டாரங்கள் கூறும்போது, "அரசியல் காரணங்களுக்காக இந்த நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதன் மூலம், இரு நாடுகளுக்கான முக்கியமான விமானச் சேவை தடைபடும் வாய்ப்புள்ளது" என்றனர்.
அவ்வாறு விமானச் சேவை தடைபட்டால், பயணிகள் வாகா-அட்டாரி எல்லை வழியாக நடந்து சென்று பாகிஸ்தானையோ அல்லது இந்தியாவையோ அடையலாம். அல்லது, துபாய் வழியாக பாகிஸ்தான் அல்லது இந்தியாவை அடையலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT